6 மாத காலத்திற்குள் தெரிவுக் குழு தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சனாதிபதி மகிந்த ராசபட்ச உத்தரவிட்டுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராயபட்ச தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே 6 மாத காலத்துக்குள் தனது பணியை முடிக்கும் என்று அறிவிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அதன் விசாரணைகள் நீடித்துச் செல்வதை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோன்று தெரிவுக் குழு 6 மாதங்களிற்குள் தனது பரிந்துரைகளைக் காணும் என்ற காலக்கெடு நிறைவேறும் சாத்தியங்கள் மிகக் குறைவாகவே அமையும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முதற்படியாக 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி வந்த ஜனாதிபதி, தற்போது தெரிவுக் குழுவை அமைப்பதானது தனது முன்னைய திட்டத்தை அவர் கைவிட்டுவிட்டார் என்பதும், தீர்வு தொடர்பாக காலத்தை இழுத்தடித்து சர்வதேச நாடுகளை ஏமாற்றும் அறிகுறியே என்றும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.