இந்திய அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவள்ள கருத்தரங்கிற்கு ஏழு தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபிக்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
எதிர்வரும் 23,24ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராசாவும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்தசங்கரியும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் சித்தார்த்தனும், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சார்பில் வரதராஜப்பெருமாள் மற்றும் சிறிதரன் ஆகியோரும், ஈஎன்டிஎல்எவ் சார்பில் பரந்தன் ராஜனும் இந்தக் கருதரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் ஈபிடிபி பிரதிநிதிகள் எவரும் இந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்படவில்லை.
டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவர் புதுடெல்லி வர இந்திய அரசாங்கம் எவ்வாறு அனுமதி அளித்தது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்தநிலையிலேயே ஈபிடிபியை இந்தியா ஒதுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.