திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள் ஒன்று வானில் பறந்தது.
பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால், மக்கள் சாதாரணமாக எண்ணினர். ஆனால், அதே போன்று அடுத்தடுத்து 4 பொருட்கள் வானில் மிதந்தவாறு நகர்ந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் கண்களில் இவை தென்பட்டன. பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் ஏறி, மர்மப் பொருட்கள் பறந்து சென்ற திசையை பார்த்தனர். சிறிது நேரத்தில் அவை மாயமாயின. பார்ப்பதற்கு அவை பறக்கும் தட்டுகள் போல் இருந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி கூறுகையில், ‘‘வானில் அடுத்தடுத்து பறந்து சென்ற மர்மப் பொருட்கள் என்னவென்று புலப்படவில்லை. பறக்கும் தட்டுகளாக இருக்க வேண்டும். இதனால் இரவு முழுவதும் மனதளவில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. இது போல திருமங்கலம் பகுதியில் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார். ஆசிரியர் வைரமுத்து கூறுகையில், ‘‘வானில் அவ்வப்போது இதுபோன்று பொருள்கள் தட்டுப்படுவது அல்லது பறப்பது உண்டு. விண்கற்கள் அல்லது எரிநட்சத்திரங்களாக இருந்தால் அவை வளிமண்டலத்தை தாண்டியவுடன் எரிந்து விடும். அதனால் பறந்து சென்ற இவை விண்கற்களோ, எரிநட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இவை பறக்கும் தட்டுக்களாக இருக்கலாம்’’ என்றார்.