14 .08.2011 -போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு மருத்துவ மனைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல் தடவையாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வடக்கின் மருத்துவ மனைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சில நோயாளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவை ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்ற தலைப்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அண்மையில் வெளியிட்ட அறி;க்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வன்னி புதுக்குடியிருப்பு மருத்துவ மனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் நோயாளிகள்கொல்லப்பட்டதுடன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ மனையின் மீது நேரடியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்துள்ளது.
எனினும் இந்தத் தாக்குதல்களை அரசாங்கப் படையினர் மேற்கொண்டதாகவோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாகவோ குறிப்பிடப்படவில்லை.
தற்காலிக மருத்துவ மனைகளின் மீது இரண்டு தரப்பினரும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை இன்னமும் பதிலளிக்கவில்லை
நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வமாக பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் முழுமையான பதில் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் விரைவில் அவ்வாறான ஓர் பதில் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.