12 .08. 2011 போர் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முதல் தடவையாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
போர் நிறைவடைந்த காலப்பகுதியில் வடக்கில் ஆறு பேரும், கிழக்கில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மொழி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஒரு கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
800000 ரூபா கப்பமாக கோரப்பட்டதாகவும் கப்பத் தொகையை வழங்க மறுத்த காரணத்தினால் கடத்தப்பட்டவர் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது எனவும், உடனடியாக விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.