கொழும்பு, டொரிங்டன் ஒழுங்கை, இலக்கம் 189ம் தோட்டத்தில் வலய அமைப்பாளர் சுருதி பிரபா, அபிவிருத்தி சங்க தலைவர் அந்தோனிபிள்ளை ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் இடதுசாரி முன்னணி தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவுடன் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கொழும்பு மாநகர பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்கள் கணிசமாக வாழ்வது இனவாதிகளின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக சிறுபான்மை ஏழை மக்களின் காணிகளை அபகரிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இந்த தோட்டத்திற்கு அடுத்து அமைந்துள்ள 187வது இலக்க தோட்டத்தில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் இன்று நடுத்தெருவிற்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் அமைச்சர்களின் வாக்குறுதிகளை நம்பி இந்த அப்பாவி மக்கள் தங்களது வீடுகள் உடைக்கப்படுவதற்கு சம்மதித்தனர்.
புதிய வீடுகளை கட்டித்தருகின்றோம் என்றும், அதுவரை வருடாந்த வாடகை பணமாக ஒரு இலட்ச ரூபாய் தருகின்றோம் என்று சொல்லி இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இன்று முதல் வருட வாடகைப்பணம் வழங்கப்பட்டு, இரண்டாம் வருடத்திற்கான வாடகை பணத்துடன் இந்த மக்களின் டொரிங்டன் பிரதேச வாழ்க்கை வரலாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட புதிய வீடுகள் இன்னமும் கட்டப்படவில்லை. புதிய வீடுகளை கட்டுவதற்கு பணமில்லை என்று இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையை விரித்துவிட்டார்கள்.
புதிய வீடுகளை கட்டுவதற்கு பணமில்லாதவர்கள் எதற்காக இருந்த வீடுகளை உடைத்தார்கள் என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.
இனிமேல் அபிவிருத்தி என்ற போர்வையிலே புதிய வீடுகள் கட்டுவதற்காக பழைய வீடுகளை உடைக்க முடியாது.
முதலில், கட்டப்படும் புதிய வீடுகள் அமைகின்ற காணியை சம்பந்தப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்து, கட்டப்படும் புதிய வீடுகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மக்கள் சம்மதத்துடன் குடிபெயரவேண்டும்.
அதற்கு பிறகுதான் பழைய வீடுகள் உடைக்கப்பட முடியும்.
இதுதான் நியாயம். இந்த நீதியை நிலைநாட்டுவதற்கான அரசியல் பலத்தை எதிர்வரும் மாநகரசபை தேர்தலின் மூலம் தமிழ் பேசும் மக்கள் எங்களுக்கு தரவேண்டும். அதற்கான அரிய சந்தர்ப்பம் தேர்தல் மூலமாக வந்துகொண்டிருக்கின்றது.