07 .8.2011 நியமனம் பெறுபவர் பார்த்தசாரதியா? ரொமேசு பண்டாரியா? என்று குமரிநாடு இணையம் கேள்வி கேட்டு நிற்கிறது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளது.
வடக்கு கிழக்கு அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் குறித்த பிரதிநிதி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசேட பிரதிநிதி நியமனம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நீண்ட கால அடிப்படையில் இலங்கையில் தங்கியிருந்து அரசியல் தீர்வுது; திட்டம் குறித்த உதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்த்தமற்ற வகையில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாகவே, இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து செயற்படும் நோக்கில் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்தின் அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளை பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனைத் திட்டங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், எந்தளவில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என்பதனையும் இந்த யோசனைத் திட்டத்தின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும் எனவும் குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அநேக சந்தர்ப்பங்களில் ஏனைய தரப்பினரின் தீர்வுத் திட்டங்களை அரசாங்கம் கோரி நிற்பதாகவும், இதனை காலத்தை கடத்தும் ஓர் உத்தியோகவே நோக்க வேண்டியுள்ளது என அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கான தீர்வுத் திட்டத்தை முதலில் முன்வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு காணப்படுவதாக குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதித் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.