இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது.
சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என்று நம்பப்படுகின்றன.
இந்தநிலையில் என்ன காரணங்களுக்காக குறித்த விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தன என்பதை ஆராய்வதாக இலங்கை உள்ளுர் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இரண்டாம் இணைப்பு
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.
ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.