06.08. 2011 அப்படியாயின் விருப்பமின்றிப் பேசிவந்த தந்திரம் உடைக்கப்பட்டது என்று கருதலாம் குமரிநாடு..விடுதலைப் புலிகள் இயக்கம் போன்று நடந்து கொள்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அரசாங்கம் குற்றசுமத்தியுள்ளது.
நேற்றைய 10ஆவது சுற்றுப் பேச்சுக்களைத் தொடர்ந்து அரசாங்க பேச்சுக் குழுவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுஜின் வாஸ் குணவர்த்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதியைத் தீர்மானிக்க கூட்டமைப்பு மறுத்து விட்டது. அரசியல் தீர்வு தொடர்பான 3 கோரிக்கைகளுக்கு அரசு 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அது தெரிவித்துள்ளது. கூட்டமைப்பு குறிப்பட்ட 3 விடயங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்தது. சம்பந்தப்பட்ட எல்லோரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்திலேயே நேர்மையான நீடித்திருக்கக்கூடிய தீர்வு ஒன்றை எட்ட முடியும்.
கூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. நாட்டின் தேசியப் பிரச்சினை தொடர்பாக அரசின் பிரதான கட்சியான சுதந்திரக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இது பற்றியே பேசப்பட்டு வருகின்றது. இந்த முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகப் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தாமல் இப்போது உடனடியாகத் தீர்மானம் ஒன்றுக்கு வருவது சாத்தியமில்லை.
இத்தகைய ஒரு நிபந்தனையை கூட்டமைப்பு விதிக்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை. இது விடுதலைப் புலிகளின் நடவடிக்கையைப் போன்று உள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு படிப்படியான அணுகுமுறையைக் கொண்ட நடவடிக்கை மூலமே சாதகமான பெறுபேறு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தகைய ஒரு இலக்கை அடைவதற்கே அரசு முயற்சிக்கிறது. அதற்காக கடந்த பல மாதங்களாக பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களுடன் அரசு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
எந்த ஒரு சமூகத்தையும் சுதந்திரக் கட்சி மட்டும் பரதிநித்துவப்படுத்தவில்லை. அதுபோலவே கூட்டமைப்பும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி அல்ல. இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டதால் அரசு இனி, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஆராயும். எல்லா மக்களதும் பிரதிநிதிகளும், அரசமைப்பல் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக் குறித்த தமது சிந்தனையுடன் கூடி விவாதிக்கக் கூடிய ஒரு இடமாக, மன்றமாக தெரிவுக் குழுவே அமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என அரசு எதிர்பார்க்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.