03.08. 2011 கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுந்தீவுப் பகுதியிலிருந்து 60 யுவதிகள் கடற்படையின் விசேட தையல் பயிற்சிக்காக காலிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்குள்ள பொது அமைப்புக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் இவர்கள் 60 பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது கிழக்கு மாகாண ஆளுனரான மொகான் விஜயவிக்கிரம நெடுந்தீவுப் பகுதியில் தங்கியிருந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வேளையில் நெடுந்தீவுப் பகுதியில் பொதுசன ஐக்கிய முன்னணியின் பெயரில் போட்டியிட்ட ஈபிடிபி வெற்றி பெற்றால் கடற்படையினரின் சீரூடை தைக்கும் பணிகள் நெடுந்தீவிலேயே முன்னெடுக்கப்படும் என உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடற்படையினரின் சீரூடை தைக்கும் நடவடிக்கைகளுக்காகவே இவர்கள் 60 பேரும் பயிற்சிக்கென காலிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடற்படையின் அழைப்பை அடுத்து இவர்கள் பங்கெடுத்ததாகவும் எனினும் இவர்களுக்கு ஆலோசனை வழங்க முற்பட்ட பலரும் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கிளிநொச்சிப் பகுதயில் இவ்வாறு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை பல்வேறு தரப்புகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது கடற்படையினரின் சீருடை தைப்பதற்காக பயிற்சி வழங்குவதற்காக நெடுந்தீவிலிருந்து 60 யுவதிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 10 நாள் பயிற்சிகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர்களை கடற்படையினர் நேர்முகப் பரீட்சைக்கு அழைத்ததாகவும் 60 யுவதிகள் நேர்முகப் பரீட்சைக்கு சென்றதாகவும் அந்த 60 பேருமே தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் காலி கடற்படை முகாமிற்கு பயிறிசிக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.