திருகோணமலை மாவட்டத்தின் தெற்கே உள்ள சேருவில பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினரான க.சிவலோகேஸ்வரனுக்கு எல்லைப்புறக்கிராமமான ஆதியம்மன் கேணியில் வரவேற்பளிக்கப்பட்டது.
அந் நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போதே திருச்செல்வம் இக் கருத்தை வெளியிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்கள குடியேற்றம் தற்போது வேறு வடிவங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ் மண்ணில் உல்லாசப் பயண அபிவிருத்தித் திட்டம், உப்புத் தொழிற்சாலை, வீடமைப்புத் திட்டம் என்ற பெயரில் பெரும்பான்மையினத்தவரைக் கொண்டு வந்து குடியேற்றி, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையினராக வாழும் தமிழ் மக்களை சிறுபான்மையினராக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் சொந்த மண்ணில் அழிக்கும் முயற்சியே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தமிழ் மக்களுடைய சொந்த மண்ணில் அவர்களின் வரலாற்று ரீதியான இருப்பையே இல்லாதொழிக்கும் முயற்சிதான் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
சேருவில பிரதேச சபையின் உறுப்பினராக சில வருடங்களுக்கு முன்னர் நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் உறுப்பினரான கலாபவன் இனந்தெரியாதவர்களினால் போர்க் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்னாருக்கு இக்கூட்ட ஆரம்பத்தில் இரு நிமிடமௌனாஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் குடிநீரை ஆபத்திலிருந்து பாதுகாக்க, வேண்டும்- பொறியியலாளர் ராஜன் பிலிப்புப்பிள்ளை!
சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் மாதாந்த ‘மாஞ்சோலை’ கருத்தரங்கு 26.07.2011 செவ்வாய்கிழமை மாலை 5மணிக்கு சிந்தனைக்கூட இயக்குனர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கனடாவில் இருந்து வருகை தந்திருந்த சிரேஷ்ட பொறியியலாளர் திரு.ராஜன் பிலிப்புப்பிள்ளை அவர்கள் ‘வடபகுதியின் அபிவிருத்தி’ தொடர்பாக தனது கருத்துரைகளை முன்வைத்ததைத் தொடர்ந்து பங்குபற்றுனரின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பொறியியலாளர் ராஜன் அவர்கள் யாழ்நகரை அபிவிருத்தி செய்யும் போது கழிவுநீர் அகற்றல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார். இது சுண்ணாம்புக்கல் பிரதேசமாக இருப்பதும், தரைக்கீழ்நீரையே குடிநீராகப் பெறுவதுமான நிலை காணப்படுவதனால் கழிவுநீரை தரைக்குக் கீழ் தேக்கிவைப்பது அல்லது சில காலம் தேக்கி வைத்து அகற்றுவது போன்ற, தற்போது நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் என எச்சரித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ்நீரின் மாசுத்தன்மை ஏறத்தாழ 40 வீதமாக காணப்படுகின்றது. தரைக்கீழ் நீருடன் மலசலக்குழி அசுத்தங்கள் தரையின் கீழாக கிணற்றுடன் இணைவதால் தான் பெருமளவுக்கு இம் மாசடையும் நிலை காணப்படுகிறது. இவ் ஆபத்திலிருந்து மீள்வதற்கு பாதாளசாக்கடைநீர் வெளியேற்ற திட்டத்தை மிக விரைவாக அமுல்நடத்த வேணடும் என்றார். இச்சாக்கடை நீர் வெளியேற்ற வசதிகள் செய்யப்பட்ட பின்னரேயே சுற்றுலாத்துறை அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட நான்குஃஜந்து நட்சத்திர ஹேட்டேல்களை உருவாக்க முடியும். யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் இருப்பது போன்று கழிவுகள் தொற்று நீக்கப்பட்டு கடலில் விடப்படும் முறை போல் எல்லாப் பகுதிகளையும் இணைக்கக்கூடியதாக இத்திட்டம் அமுல்நடத்தப்பட வேண்டும் என்றார்.
குடாநாட்டிற்கு குடிநீரை இரணைமடுக் குளத்திலிருந்து எடுத்துவருவது வரவேற்கத்தக்க ஒரு திட்டமென்றும், இதனால் வன்னிப்பிரதேச மக்கள் பாதிப்படைவர் என்பது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என்றும் கூறினார். இரணைமடுக் குளத்தின் நீர் வெளியேற்ற அளவில் 3 – 5 வீதமே யாழ்ப்பாணக் குடிநீருக்காக செலவாக உள்ளது. மேலும் வன்னியில் இரணைமடு போன்ற கொள்ளளவு கொண்ட இன்னும் சில குளங்களையும் அமைக்க முடியும். உதாரணமாக குடமுறுட்டி ஆறு, பாலி ஆறு என்பவற்றை மறித்துக் கட்டுவதன் மூலம் புதிய தேக்கங்களை உருவாக்க முடியும்.
பங்குபற்றுனரின் வினா ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இங்கு தகவல்தொழில்நுட்ப அபிவிருத்திக்கும், ஆங்கிலஅறிவு விருத்திக்கும், பெருமளவு பங்களிக்கலாம் என்றும், வெளிநாடு சென்று கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக் கொடுப்பதோடு நிதி உதவியும் செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக ‘மதிஉரை குழுக்ளை’ புலம்பெயர் நிபுணர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும் எனவும் அக் குழுவினர் பல்துறைசார் அபிவிருத்திக்கு உதவிபுரிய வேண்டும் எனவும் கூறியதோடு அதற்கான நிறுவன அமைப்புக்களைப் புலத்தில் வாழ்வோரும், புலம்பெயர்ந்து வாழ்வோரும் இணைந்து விரைவாக உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்தார்.
தமிழர் அரசியல், பொருளாதார, அபிவிருத்தி தொடர்பான தகவல்களை தென்னிலங்கையில் உள்ளோரும், சர்வதேசத்தினரும் ஜயுறவின்றி புரிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் முன்னர் வெளிவந்த “Saturday Review ‘திசை’ போன்ற பத்திரிகைகள் போல் இணைய பத்திரிகைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் முடியுமானால் சிங்களத்திலும் வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற ஆழமான கலந்துரையாடலில் கருத்தரங்கில் பங்குகொண்ட பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், என்போர் தமது கருத்துக்களை வெளியிட்டனர். மாலை 7மணியளவில் கருத்தரங்கு நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.