அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தலைவர்கள் தவறிழைத்தாலும் தமிழ் மக்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று 1949இல் தந்தை செல்வா அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறிய கூற்று இன்று நிதர்சனமாகிவிட்டது. இவ்வுரிமைப் போராட்டத்தில் தந்தையும், அவரோடு இணைந்த தளபதிகளும், தனயர்களும் செய்த தியாகம் வீண் போகவில்லை என்பதையும் இன்றும் மக்கள் அவற்றை மறக்கவில்லை என்பதையும் இம் முடிபுகள் துலாம்பரப்படுத்தியுள்ளன.
பல்தேசிய இனங்கள் வாழும் இந் நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறிமாறி வந்த அரசுகளின் தவறான அணுகுமுறையால் தமிழ் மக்கள் சந்தித்த சவால்கள் பல. சோதனைகளும், வேதனைகளும் பல. இவர்கள் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை. உரிமைகளுக்குச் சலுகைகள் மாற்றீடல்ல என்பதையும் முறையான அரசியல் தீர்வின் பின்னரே நிறைவான அபிவிருத்திக்கான வாய்ப்புண்டு என்பதையும் இம் முடிபுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
இம் முடிபுகள் இச் சந்தர்ப்பத்திலும் கூட எதுவித வெளியார் தலையீடுமின்றி பல்தேசிய இனங்கள் வாழும் நம் நாட்டில் இவர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை அங்கீகரித்து முறையான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்கான வாய்ப்பையும், கடப்பாட்டையும் அரசுக்கு அளித்துள்ளன.
சுதந்திரத்தின் பின்னர் மாறிமாறி வந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்ட அரசியல் தீர்வின் அவசியத்தை இம் முடிபுகள் சர்வதேசத்தின் பார்வைக்கு வைத்துள்ளன. இம் முடிபுகள் இனப் பிரச்சினையின் மூல காரணத்தை நன்கு உணர்ந்து சர்வதேச தரத்திலான ஒரு அரசியல் தீர்வை வழங்கும் ஒரு கடப்பாட்டிற்குள் இந்தியாவையும், சர்வதேசத்தையும் ஆளாக்கிவிட்டன.
இறுதியாக இத் தேர்தல் முடிபுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீதோ அன்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதோ உள்ள பற்றினால் அளிக்கப்பட்ட வாக்குகள் எனக் கருதுவதும் தவறு. தமிழ் மக்களின் உரிமைக் குரலின் குறியீடாக இவர்கள் விளங்குவதால்தான் இவர்களின் தலைமையை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.
இவர்கள் தமக்கு மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலான பாதையிலிருந்து விலகிச் செல்லும்போது தூக்கி எறியப்படுவார்கள் என்ற ஒரு எச்சரிக்கையையும் இம் முடிபுகள் கோடிட்டுக் காட்டியுள்ளன. தமிழ்த் தேசியத்தின் வரலாற்றினை நன்கு புரிந்தோருக்கு இது நன்றாக விளங்கும்