குறிப்பாக ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் தனது அமைச்சர் பட்டாளத்தோடு முகாமிட்டு அபிவிருத்தி என்றபோர்வையில் வேட்டி, சேலை போன்ற பல இலவசங்களை அள்ளி வழங்கி இருக்கிறார்.
எமது உறவுகளை பல்லாயிரக் கணக்கில் கொன்றொழித்த அரக்கர்கள் அவர்களது குருதி தோய்ந்த கைகளுடன் இன்று தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.
மருத்துவ மனைகளை இலக்கு வைத்துத் தாக்கி நோயாளிகளைக் கொன்றவர்கள் இன்று தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.
சரண் அடைந்த வி.புலித் தளபதிகளையும் போராளிகளையும் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றவர்கள் தமிழ்மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருகிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதை தாரை தப்பட்டையோடு கொழும்பில் இராணுவ அணிவகுப்பு நடத்திக் கொண்டாடியவர்கள் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்.
எமது மக்களை முள்ளுவேலி முகாம்களுக்குள் ஆடுமாடுகள் போல் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது தமிழ்மக்களது வாக்குக் கேட்டுத் தெருத்தெருவாய் திரிகிறார்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களக் குடியேற்றங்களையும் இராணுவ தளங்களையும் இராணுவ குடியிருப்புக்களையும் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவுவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட எமது மக்களை மீள்குடியமர்த்துவதில் காட்டாத மகிந்த இராசபக்சே தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்.
மாவீரர்களின் துயிலும் இல்லங்களை உழுது அழித்த காட்டுமிராண்டிகள் தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டு வருகிறார்கள். சிங்கள இராணுவத்துக்கு ரூபா 21,500 கோடி செலவழிக்கும் மகிந்த அரசு மீள்குடியமர்வுக்கு வெறுமனே ரூபா 174 கோடியை மட்டுமே செலவழிக்கிறது. இந்த அரசின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேதான் தமிழ்மக்களிடம் தனது கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.
போரினால் இடப்பெயருக்கு உட்பட்ட 320,000 பேர்களில் 190,000 பேர் இன்னமும் உறவினர்களது வீடுகளில் தங்கியிருக்கிறார்கள்.30,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கிறார்கள்.
மெனிக்பாமில் 16,000 பேர்தங்கியுள்ளார்கள். எஞ்சிய 84,000 பேர் மட்டுமே சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த இலட்சணத்தில் மகிந்த இராசபக்சே தமிழ்மக்களது வாக்குக் கேட்டு வருகிறார்.
மகிந்த இராசா போர்க்குற்றச்சாட்டில் இருந்து தப்புவதற்கே உள்ளாட்சித் தேர்தலில் எதைக் கொடுத்தும் எதைக் காட்டியும் வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு நிற்கிறார்.
ஒரு சில சபைகளில் வென்றால் அதை வைத்து தமிழ்மக்கள் தன் பக்கம் என்று மகிந்த இராசபக்சே உலகத்தை ஏமாற்றவே இந்தத் தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பட்டாளத்தோடு நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்.
சிங்கள பௌத்த வெறியரான மகிந்த இராசபக்சேயின் பரப்புரையில் தாயக மக்கள் ஏமாற மாட்டார்கள் என நம்புகிறோம்.
இந்தத் தேர்தலில் தாயக மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு தவறாது வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும்.
அதன் மூலம் சிங்கள – பௌத்த இனவாதி மகிந்த இராசபக்சேக்கு தாயக மக்கள் நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
கனடியத் தமிழர் தேசிய அவை.