தமிழ்நாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்வது, வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வது, முதலீட்டிற்கான உகந்த சூழல் தமிழ்நாட்டில் நிலவுவது, தமிழ்நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க 300 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 சூரிய மின் உற்பத்திப் பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஆகியன பற்றி இரு தலைவர்கள் விரிவாக பேசியதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்சனை குறித்துப் பேசியுள்ள தமிழக முதல்வர், அங்கு போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் போருக்கு முன் இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்றும், அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரின் கவலைகளை பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ள கில்லாரி, இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணபதில் அங்கு நிலவும் முட்டுக்கட்டையைப் போக்க புதுமையான ஒரு தீர்வு குறித்து அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது என்றும், தாங்கள் வாழ்ந்த வீடுகளில் தமிழர்கள் குடியேற உதவுவோம் என்றும் கூறியுள்ளார் என்று அரசு செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டின் முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு நீட்டித்துள்ளது என்று ஹில்லாரியிடம் தமிழக முதல்வர் கூறியதாகவும் அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
யெயலலிதா, கில்லாரி சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது என்றும், இந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ள அரசு செய்திக் குறிப்பு, இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க அயலுறவு துணை அமைச்சர் பாப் பிளேக், மிலானி வெர்வீர், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் பீட்டர் பர்லீக், அமெரிக்க அரசின் சென்னை துணைத் தூதரக அதிகாரி ஆண்ட்ரூ டி. சிம்கின் ஆகியோர் உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது.