குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மகிந்தரை தனிமைப்படுத்தும் திட்டமா?

27.03.2015-மகிந்தர் என்னதான் தோற்றுவிட்டாலும் ஒரு மூலையில் ஒதுங்கிவிடும் நபரல்ல என்பதை நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மகிந்தர் மீண்டும் அரசியலுக்குள் நிறைவேற்று அதிகார பிரதமர் பதவியைப் பெற்று விடுவதற்காக திரைமறைவில் செயல்பட்டு வருகின்றார்.

மகிந்தருக்கு ஆதரவான கூட்டங்கள் என்ற போர்வையில் நுகேகொடை, கண்டி. இரத்தினபுரி என்று மூன்று கூட்டங்கள் நடைபெற்று முடிந்து விட்டது. தற்போது கடந்த வியாழக்கிழமை இரத்தினபுரிக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டங்களை மகிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, தினேஷ்குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

 

ஆனால் இரத்தினபுரிக் கூட்டத்திற்கு எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் மஹிந்த ஆதரவு அணிக்குப் பலமாகவே உள்ளது.

 

கடந்த வாரம் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேருக்கு முழு அமைச்சும் பாதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. இந்த 26 பேரில் சனாதிபதித் தேர்தலின் பின்பு மன்னர் மகிந்தருக்காக குரல் கொடுத்து வந்த பலர் உள்ளார்கள். அத்துடன் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை தேர்தல் மேடைகளில் நாறடித்துத் தூற்றியவர்கள் உள்ளார்கள்.

 

குறிப்பாக முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க முன்னாள் அதிபர் சந்திரிகாவை நடுவீதியில் நிர்வாணமாக ஒட ஓட விரட்ட வேண்டும் என்று பெண்களை மதிக்கத் தெரியாது கேவலமாகப் பேசியவர்.  மற்றும் மொனராகலை பவித்திரா வன்னியராச்சி அதிபர் சிறிசேனாவை தூற்றியவர்.

 

இந்த இருவரும் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக பலவகையான அவதூறுகளை கட்டவிழ்த்து விட்டவர்கள். திஸநாயக்கவுக்கு கிராம அபிவிருத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள் அதிபர் சந்திரிகா மற்றும் அதிபர் சிறிசேனாவின் தேர்தல் பரப்புரை நட்சத்திர பரப்புரையாளர்கிருணிகா பிரேமச்சந்திரன் ஆகியோர்கள் தனது ஆட்சேபனை மற்றும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

 

ஆனால் இந்த 26 எம்பிக்களையும் அரசில் இணைத்துக் கொண்டதன் பின்னால் இந்தியாவின் ஆலோசனை உள்ளதாக ஒரு இரகசியத் தகவல் உள்ளது.

 

இந்தியாவின் ஆலோசனையும் ஆசையும்

 

இந்தியப் பிரதமர் மோடி வந்த பின்புதான் இந்த 26 பேரும் அரசில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் டில்லியில் உள்ள சவுத் புளக் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் ஆலோசனைக்கு இணங்கவே இந்த விடயம் கையாளப்பட்டுள்ளது.

 

ஏற்னனவே இந்தியா சென்ற அதிபர் சிறிசேனாவிடம் டில்லியில் வைத்து இந்த ஆலோசனை வழங்கப்பட்டாலும் இலங்கைக்கு மோடி வந்து சென்றதன் பின்புதான் இந்த விடயம் நடைபெற்றுள்ளது.

 

மோடி வருவதற்கு முன்னரே இந்த விடயம் நடந்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்காமல் மோடி வந்து சென்றதன் பின்புதான் மகிந்த அணியில் இருந்து இந்த 26 எம்பிக்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் மறிந்த அணியில் இருந்து அரசில் இணையவுள்ளார்கள்.

 

காரணம் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகளவு உள்ளது என்று ஏனைய நாடுகளுக்கும் தெரியட்டும் புரியட்டும் என்று மோடி விரும்புகின்றார். இந்தியா விரும்புகின்றது.

 

காரணம் இந்தியா கொண்டு வந்துள்ள இந்த நல்லாட்சியை சீராகக் கொண்டு செல்லவும் அதற்கான செயல்களைச் செய்யவும் இந்தியாவுக்கான வகிபாகம் கடப்பாடு இந்தியாவுக்கு நிறையவே உள்ளது.

 

அந்த வகையில்தான் அதிபர் சிறிசேனவின் பாதுகாப்பில் கொழும்பிலுள்ள இந்திய றோ அதிக கண்காணிப்பைச் செலுத்துகின்றது. முன்னாள் அதிபர் மகிந்தர் சீனாவுடன் தேனிலவு கொண்டு இந்தியாவுக்கு எரிச்சலூட்டும், சீற்றத்தை உருவாக்கும் பலவகையான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

 

ஆனால் இந்த நல்லாட்சி அரசு இந்தியாவின் ஆலோசனையின் பெயரில் செயல்பட்டு வருகின்றது. அதனால் அதிபர் சிறிசேனவின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது.அத்துடன் இந்த நல்லாட்சி தொடர்ந்து செல்ல இந்தியா தனது பங்களிப்பையும் தனது அவதானத்தையும் தொடர்ந்து இலங்கை மீது செலுத்தும்.

 

இப்போது மகிந்தர் அணியின் பலம் மிக அதிகமாகக் குறைக்கப்பட்டு;ள்ளது. மகிந்த விசுவாசிகளாக இருந்த இந்த 26 பேரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த அரசுக்கு எதிராக நாற வாய்களைத் திறந்து பீரங்கித் தாக்குதல் பரப்புரைகள் மூலமாக ஒரு பெரும் அணியாக, பலமாகச் செயல்படலாம் என்ற ஒரு விதமான பயம் இருந்து வந்தது.

 

அத்துடன் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போன்று. மஹிந்த ஆதரவு கொண்ட அணியினர் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மகிந்த புகழ்பாடி அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால் அரசுக்கு ஆபத்து என்ற பயமும் அரசுக்குள்ளது.

 

அதனால் மகிந்தரின் ஆதரவுக்காரர்களை அரசுக்குள் இழுத்து மகிந்தரின் பலத்தை உடைத்து மகிந்தரை தனிமைப்படுத்தி ஓரங்கட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் திட்டம்.

 

அதன் மூலமாக மீண்டும் மஹிந்தர் ஆட்சி பீடம் ஏறக் கூடாது என்ற ஆசையும் இந்தியாவுக்கு உள்ளது. மறுபக்கம் அதிபர் சிறிசேனவிற்கு எதிராக ஏதாவது சதிகள், சதி முயற்சிகள் நடந்து விடக் கூடாது என்ற அச்சமும் இந்தியாவிற்கு உள்ளது.

 

இலங்கையின் ஆட்சி என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன் சார்ந்தது. இலங்கையின் ஆட்சியானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகவும் அவதானமாகவுள்ளது.

 

அத்துடன் இலங்கை ஆட்சியானது சீனாவுடன் நெருங்கிச் செல்லாமல் இந்தியாவுடன் அதிகமான நெருக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற பெருத்த எதிர்பார்ப்பில்தான் இந்தியா உள்ளது.

 

அதனால்தான் இந்தியா இலங்கைக்குள் ஆட்சி மாற்றம் ஆள்மாற்றம் என்பதுடன் நிற்காமல் தொடர்ந்து இந்த ஆட்சியை நடாத்துவற்குத் தேவையான ஏற்பாடுகளையும் இந்தியா செய்து கொடுக்கின்றது. அந்த வகையில்தான் மகிந்த ஆதரவுப் படை எம்பிக்கள் ஆட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 

மகிந்த ஆதரவுடைய அணி இன்னும் உள்ளது

 

மகிந்த ஆதரவு கொண்ட சுதந்திரக் கட்சி எம்பிக்கள் அரசில் இணைந்து கொண்டாலும் இன்னும் பல எம்பிக்கள் உள்ளார்கள். மகிந்தவின் விசுவாசிகளான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேச் குணவர்தன, உதய கம்மன்வில ஆகியோர்கள் உட்பட இன்னும் பலர் உள்ளார்கள்.

 

அதனால் இன்னும் மகிந்தர் தனித்து விடப்பட்டுள்ளார் என்று சொல்லிட முடியாது. இவர்கள் இன்னும் மகிந்தருக்கு ஆதரவான கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றார்கள். மறுபுறம் நிமல் டி சிறிபால, அநுர பிரியதர்ஷன யாப்பா போன்ற முக்கியமானவர்கள் உள்ளார்கள். மற்றும் சுதந்திரக்கட்சி எம்பிக்கள் பலர் உள்ளனர்.

 

மகிந்தர் இன்னும் மாவீரன் நெப்போலியன் போன்று சிங்கள மக்களால் பார்க்கப்படுகின்றார். இந்த நால்வரும் மகிந்த துதிபாடி வருகின்றார்கள். அதனால் மகிந்தர் இன்னும் அரசியலை விட்டு ஒதுங்கி விடவில்லை. மகிந்தர் பதுங்கி வருகின்றார்.

 

மகிந்தர் சாதாரணமாக ஒரு எம்பியாக பாராளுமன்றம் சென்றாலும் அது அதிபர் சிறிசோனவிற்கு ஆபத்தானது. ஆட்சிக்கு ஆபத்தானது. மஹிந்தர் என்ன விலை கொடுத்தாலும் நாடாளுமன்றம் செல்வதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றார்.

 

அதேநேரம் சு.க.யை விட்டு விலகும் எண்ணமும் இல்லை. மஹிந்தருக்கு இன்னும் ஆட்சி ஆசை விட்டுப் போகவில்லை.இந்த ஆசை பற்றி வெளிப்படையாகவே மஹிந்தர் சொல்லியுள்ளார்.

 

சு.க.பிரதமர் வேட்பாளராகும் முயற்சி

 

மகிந்தர் சும்மா விட்டில் உறங்கவில்லை.தற்போது ஊர் ஊராக கோயில் குளமென்று பௌத்த பன்சலைகளுக்குச் செல்வது போன்று ஊர் ஊராக சாதாரண அடிமட்ட மக்களைச் சந்தித்து வருகின்றார். மகிந்தர் மலர் தட்டுகளுடன் சிங்கள மக்கள் மத்தியில் வலம் வருகின்றார்.

 

மகிந்தர் அண்மையில் நாட்டிலுள்ள சுதந்திரக் கட்சி உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார். மற்றும் மாகாண சபை உறுப்பினர்களைச் சந்தித்துள்ளார். பாக்கி இருப்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

 

இவர்களையெல்லாம் சந்தித்து சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்தரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை கட்சியின் தலைவர் அதிபர் சிறிசேனா மற்றும் கட்சியின் உயர் மட்டத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியை மகிந்தர் உருவாக்கி வருகின்றார்.

 

இதேநேரம் சுதந்திரக் கட்சியின் 26 எம்பிக்கள் கூட்டாக இணைந்து மகிந்தரை பிரதமர் வேட்பாளராக கட்சி நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள்.

 

அதனால் சுதந்திரக் கட்சி இரண்டாக உடையக் கூடிய நிலை உருவாகி வருகின்றது. இந்த உடைவைத்தான் ஐ.தே.க.யும் எதிர்பார்க்கின்றது.

 

இப்படியான உடைவொன்று ஏற்படுமானால் ஐ.தே.க. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்ற வியூகத்தில் உள்ளது. அத்துடன் சு.க.யை உடைக்க வேண்டிய பாரிய தேவையொன்றும் ஐ.தே.க.க்கு உள்ளது.

 

இப்படியான ஒரு முயற்சியின் பயனாகத்தான் கட்சியின் அதிக அழுத்தம் காரணமாகத்தான் சந்திரிகா ஆட்சியில் மகிந்தர் சனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

 

ஆனால் இப்போது நிலமை அப்படியல்ல. மகிந்தரை சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கக் கூடாது என்பதில் அதிபர் சிறிசேன மற்றும் சந்திரிகா மிகவும் குறியாகவுள்ளார்கள்.

 

ஆனாலும் எந்த எதிர்ப்புக்கள் வந்தாலும் சுதந்திரக் கட்சியூடாகவே மீண்டும் அரசியலில் குதிக்கவே மகிந்தர் விரும்புகின்றார். காரணம் தற்போது சுதந்திரக் கட்சிதான் அதிக எம்பிக்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் சுலபமாக வெற்றியடைந்து விடலாம் என்ற கணக்கில்தான் மகிந்தர் உள்ளார்.

 

இந்த எண்ணத்தில்தான் அடிக்கடி மகிந்தர் மக்களைச் சந்தித்து வருகின்றார். மகிந்தரின் மீள்வருகை என்பது நாட்டில் ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையை உருவாக்கி விடலாம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

 

காரணம் மகிந்தர் சுதந்திரக் கட்சியூடாகவோ வேறு புதிய கட்சியூடாகவோ பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு பிரதமர் பதவி கிமைக்கவில்லையென்றால் எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்புக் கிடைக்கலாம். அப்படி எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு மகிந்தருக்குக் கிடைத்தால் மகிந்தர் அரசின் ஆட்சியைக் கொண்டு செல்ல விடமாட்டார்.

 

அந்தளவுக்கு எதற்கெடுத்தாலும் தனது எதிர்ப்பைக் காட்டி நிற்பார். அத்துடன் நாட்டில் ஒரு அசாதாரண சூழுநிலையை உருவாக்கப் பார்ப்பார். மற்றும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக ஒரு தர்பாரை உருவாக்கப் பார்ப்பார்.அது தன்னை தோற்கடித்த சிறுபான்மை மக்களை பழிவாங்கும் செயலாகவும் அமையலாம்.

 

மகிந்தர் மீது அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் தன்னை அரசு பழிவாங்குகின்றது தன்னை நெருக்குகின்றது என்று கூக்குரலிடுவார். மகிந்தரின் கூக்குரலை சீனா ஐ.நா வரையும் கொண்டு செல்லும்.

 

ஆக மொத்தத்தில் மகிந்தருக்கு சீனாவும் பாகிசுதானும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும். அதனால் மகிந்தவின் சுதி அதிகரிக்கும்.

 

எந்த வகையில் பார்த்தாலும் மகிந்தவின் மீள்வருகை என்பது சிறுபான்மை மக்களுக்கும் இந்த நல்லாட்சிக்கும் மிகவும் ஆபத்தானது. மகிந்தரின் மீள்வருகை என்பது ஆட்சிக்கு பெருத்த சவால்தான் என்பதை யாரும் மறந்து விடலாகாது.

 

கோத்தபாய புதிய கட்சி உருவாக்கம்

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக மகிந்தரின் சகோதரர் பசில் தலைவராக இருந்து வந்தார். மகிந்தர் தோல்வியடைந்த பின்பு பசில் தனது மனைவியுடன் அமெரிக்கா பறந்து விட்டார். அண்மையில் இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் தலைவராக அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்தரின் தீவிர ஆதரவாளர்களான விமல் வீரவன்ச, தினேச்குணவர்தன,  வாசுதேவ. உதய கம்மன்பில ஆகியோருக்கு பொதுத் தேர்தலில் இந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சி சார்பாக போட்டியிடும் வாய்ப்புக் கிடைக்கமாட்டாது.

 

அவர்களுக்கு பொதுத் தேர்தலில் சீட் வழங்கக் கூடாது என்று இப்பவே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதனால் இந்த நால்வரும் எந்த அணியில் இருந்து நாடாளுமன்றம் செல்வார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

 

ஆனால் கோத்தபாய ராயபக்ச மற்றும் மகிந்த அணியான விமல் வீரவன்ச, தினேச் குணவர்தன. வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்னும் கட்சியில் அங்கம் வகித்து வந்தார்கள்.

 

இந்த நான்கு பேரும் எந்தக் கட்சியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றம் செல்லலாம் என்ற சிந்தனையில் உள்ளார்களாம். அதன் வெளிப்பாடுதான் புதிய கட்சி கோத்தபாய தலைமையில் உதயமாகின்றது.

 

கோத்தாவுக்கு தற்போது ஒரு பதவி தேவைப்படுகின்றது. குறைந்தது ஒரு கட்சியின் தலைவர் என்ற கோதாவில் நாடாளுமன்றம் சென்றாவது தனக்கு ஒரு பாதுகாப்புத் தேடவேண்டிய தேவையுள்ளது.

 

கோத்தபாய மற்றும் இந்த நால்வரும் இணைந்து புதிய கட்சியொன்றின் உருவாக்கம் பற்றிச் சிந்திப்பதாகவும் அந்தக் கட்சிக்கு கோத்தா தலைமை தாங்கி செயல்படவுள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தப் புதிய கட்சியின் மூலமாக கோத்தா நாடாளுமன்றம் சென்று தனது அண்ணன் மகிந்தருக்கு எதிராகவும் தனக்கும் தனது குடும்பத்திற்கு எதிராகவும் அரசாங்கம் அவதூறு விளைவித்து வருவதாகவும் பயங்கரவாத்தை ஒளித்துக் கட்டிய எங்கள் மாவீரன் குடும்பத்தை அரசியலில் இருந்து ஓரங்கட்ட இந்த அரசு சதி செய்கின்றது என்று ஒரு கலக்குக் கலக்கி மக்களிடத்தில் ஒரு அனுதாப அலையை உருவாக்கவுள்ளார்.

 

இந்த 5 பேருடன் கோத்தா அணியின் இன்னும் சிலர் நாடாளுமன்றம் சென்று நாடாளும ன்றத்தில் ஒரு அமளிதுமளியை உருவாக்கி அமையப் போகின்ற ஆட்சிக்கு எதிராக காய்நகர்த்தும் பணிகளில் கோத்தா களமிறங்கி வருவதாகவும் அதற்காகத்தான் கொழும்பு.கண்டி.இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் மகிந்தருக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தி வருவதாகவும் அறியப்படுகின்றது.

 

இதன் மூலமாக வெகு விரைவில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கி மகிந்தரை பிரதமராக்கலாம் என்று மகிந்த அணியினர் கணக்கு ஒன்று போட்டுள்ளார்களாம்.

 

எதிர்வரும் காலங்களில் நாட்டின் சகல பகுதிகளிலும் இந்த அணியினர் மகி ந்தருக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது.

 

மகிந்த ஆதரவான இந்த அணியினர் எப்படியாவது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் புகுந்து நாடாளுமன்றத்தில் மகிந்தவின் துதிபாடி மகிந்தவின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து புதிய அதிபருக்கு எதிராக சில இடைஞ்சல்களைச் செய்து நாடாளுமன்றத்தை முடக்கக்கூடியவாறு சில முன்னெடுப்புக்ளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த சில இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உண்மையிலே மகிந்த அணியின் இந்த முன்னெடுப்பானது புதிய அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான விடயமாகும். சனநாயக முறையில் இந்த அணியினர் நாடாளுமன்றத்தில் சில நகர்வுகளை நகர்த்துகின்ற போது புதிய அரசு பல சிக்கல்களில் சிக்க வேண்டிவரும்.

 

ஊழலுக்கு எதிராக நடவடிக்கையில்லை

 

அதிபர் சிறிசேனா,பிரதமர் ரணில் உட்பட இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் வரை மகிந்த அரசின் ஊழல்களை அரங்கேற்றுவோம் என்றும் சனவரி 8ம் திகதி நள்ளிரவு விமான நிலையங்கள் மூடப்படும் என்றும் தேர்தல் மேடைகளில் கூவினார்கள்.

 

100 நாட்கள் ஆட்சியில் எந்வொரு ஊழலுக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பலவகையான ஊழல்களின் ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக பிரதமர் சொல்கின்றார். ஆனாலும் மகிந்த அரசின் ஊழல்களை இந்த அரசு வெளியாக்குவதாக இல்லை.

 

அதனால் மகிந்தரின் செல்வாக்கு இன்னும் பலமாகத்தான் உள்ளது. மகிந்த மற்றும் மகிந்த அரசின் அமைச்சர்களின் ஊழல்கள் வெளியாக்கப்படுமானால் மக்கள் மத்தியில் மகிந்த மீது மக்கள் வெறுப்புக் கொண்டு மகிந்தருக்கான செல்வாக்கு சரிந்து விடும்.

 

ஆனால் தற்போது மகிந்த அரசில் கோலோச்சிய அமைச்சர்கள் இந்த அரசில் இணைந்துள்ளதால் இவர்களின் ஊழல்கள் மக்கள் மத்தியில் காட்டப்படுமா வெளியாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ரணிலின் எதிர்பார்ப்பு

 

ஆனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக யார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரணில் உள்ளாராம்.

 

மகிந்தர் சு.க. அல்லது வேறு எந்தக் கட்சி சார்பாக தனக்கு எதிராகக் களமிறங்கினால் அதாவது பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் மகிந்தரின் ஊழல்கள் மற்றும் மகிந்தர் ஆட்சியில் இடம்பெற்ற வண்டவாளங்கள் தண்டவாளத்தில் வந்து நிற்கும்.

 

அதனால் சந்தி சிரிக்கும். அதனால் வாக்குச் சரிவு ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் ஐ.தே.க. உள்ளதாம். எப்படிப் பார்த்தாலும் சு.க. சார்பாக சந்திரிகாவின் அனுசரனையுடன் பலமான ஒருவர் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படலாம்.

 

ஆனால் பிரதமர் கனவில் நிமல் டி சிறிபால உள்ளார். இவரை அதிபர் சிறிசேனா விரும்பமாட்டார். அதனால் சந்திரிகா விரும்பும் ஒருவர்தான் போட்டியிடலாம்.

 

பசில் ஐ.தே.க.யில் களமிறங்கும் எண்ணம்

 

இதேவேளை அமெரிக்கா பறந்து சென்ற பசில் ராயபக்ச ஐ.தே.க.யில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியலில் களமிறங்கும் எண்ணத்தில் ஐ.தே.க.யின் முக்கியமான புள்ளியுடன் பேசி வருவதாக அறியப்படுகின்றது.

 

மகிந்தர் எந்தக் கட்சியில் இருந்து கிளம்பினாலும் பசிலுக்கு ஐ.தே.க.யில் சீட் கிடைக்கலாம். மகிந்தரின் முடிவில்தான் பசிலின் மீள்வருகை தங்கியுள்ளது. இதன் பின்னணியில்தான் அண்மையில் பசில் மீது மகிந்தர் பாய்ந்துள்ளார்.

 

அதாவது தற்போதைய சுகாதரார அமைச்சர் ராயித சேனாரட்ன மீது நடவடிக்கை எடுக்க முயன்ற போது அதை பசில் தடுத்துக் காப்பாற்றினார். அதற்காக நன்றிக் கடனாக பசிலை ராயித காப்பாற்றி அமெரிக்கா அனுப்பி வைத்தார் என்று மகிந்தர் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். பசிலும் ராயிதவும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள் என்றும் மகிந்தர் தெரிவித்துள்ளார்.

 

எது எப்படியானாலும் மகிந்தர் அடிமட்ட மக்களைக் கண்டு தன்மீது ஒரு அனுதாப அலையை உருவாக்கி வருகின்றார். அதன் தாக்கம் பொதுத் தேர்தலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

 

நாட்டுக்கு துணிவுள்ள ஆட்சியாளர்கள் தேவைப்படுகின்றது. துணிவுடன் சில காரியங்கள் சட்டரீதியாக எடுக்காது விட்டால் நாட்டுக்கும் ஆட்சிக்கும் பெருத்த ஆபத்து என்பதை ஆணித்  தரமாக எத்தி வைப்போம்.

 

பிந்திய ஒரு தகவலின்படி கோத்தபாயவின் வீட்டில் வைத்து இந்த அரசின் ஆட்சியைக்கவிழ் க்கும் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாம். இதை மறுக்க முடியாது. காரணம் கோத்தாவின் இராணுவ அணி இன்னும் கடமையில் உள்ளது. அதனால் சதிகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதன் உண்மைத் தன்மை விரைவில் அம்பலத்திற்கு வரும்.

 

எம்.எம்.நிலாம்டீன்.