13.07.2011-யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் காவற்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்துள்ளார்.
புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.