இங்கிலாந்திலிருந்து தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்திற்கு, ஓராண்டிற்கு முன், 10 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றில், "வேஸ்ட் பேப்பர்' இருப்பதாக, ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரான்ஸ் நிறுவனம் மூலம், இதை இறக்குமதி செய்த சிவகாசி தனியார் கம்பெனி, அதை எடுத்து செல்லவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து நகராட்சி கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
கன்டெய்னர்களை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். கன்டெய்னர்களுக்குள், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், வேஸ்ட் பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ரப்பர் கையுறைகள், புழுவுடன் கூடிய நகராட்சி கழிவுகள் உள்ளிட்டவை இருந்தன.
இவற்றின் மொத்த எடை, 260 டன். இந்தியாவில் இறக்குமதி செய்ய, தடைவிதிக்கப்பட்டுள்ள இக்கழிவுகள் அடங்கிய கன்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் ராஜன் கூறியதாவது:
துர்நாற்றம் வீசக்கூடிய இந்த நகராட்சி கழிவுகள், சட்டவிரோதமாக இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
சுங்கத்துறை மூலமாக இக்கழிவுகள், இங்கிலாந்திற்கு விரைவில் திருப்பி அனுப்பப்படும்; இவற்றை இறக்குமதி செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜன் கூறினார்.
போலி ஷூக்கள், மின்சாதனங்கள் பறிமுதல்:
சீனாவில் இருந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மற்றொரு கன்டெய்னரில் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபல கம்பெனி தயாரிப்புகளின் பெயரில், போலி விளையாட்டு ஷூக்கள், அழகு சாதனங்கள், மின்சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மதிப்பு 1.22 கோடி ரூபாய். போலி முகவரி மூலம், இவற்றை இறக்குமதி செய்த டில்லியை சேர்ந்த கும்பலை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். இப்பொருட்கள் விரைவில் அழிக்கப்பட உள்ளன.
குப்பை தொட்டியாகும் தூத்துக்குடி:
மேல்நாடுகளிலிருந்து நோய்களை பரப்பும், கதிர்வீச்சை உண்டாக்கும், அபாயகரமான நகராட்சி மற்றும் மருத்துவ கழிவுகள், மாற்று பெயரில் தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வழியாக, இறக்குமதி செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.
அங்கு, "ஓசி'யில் கிடைக்கும் இவற்றை, இங்கு இறக்குமதி செய்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் சில தனியார் நிறுவனங்கள், தூத்துக்குடியை குப்பை தொட்டியாக்கி வருவது வேதனைக்குரியது.
இதை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், இக்கழிவுகள் தமிழகத்தின் எந்த பகுதியிலாவது கொட்டப்பட்டு, அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டிருக்கும்.