24. .06.2011 --இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிழையானது மிக நீண்ட காலமாக இலங்கை மீது தாக்கம் செலுத்தி வரும் இந்தியா, போரின் பின்னர் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தவறியுள்ளதாக யெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் அனர்த்த குழு சுட்டிக்காட்டியுள்ளது
நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலையீடு குறித்து இலங்கையின் சகல இன மக்களுக்கு மத்தியிலும் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்த போதிலும், அநேகமான சிங்கள மக்கள் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே கருதுகின்றனர் என அனர்த்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபுறத்தில், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக இந்தியா பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்த போதிலும் அந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதனை தடுக்க வேண்டுமாயின் இந்தியா ஆக்கபூர்வமான முறையில் இலங்கைப் பிரச்சினையில் தலையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தற்போது பயணிக்கும் பாதை பிழையானது என்பதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து இந்தியா வலியுறுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடக்கில் இராணுவமயப்படுத்தல்களை தடுத்த நிறுத்தவும், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.