குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழின் வரலாறு - பாகம் 1

 தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின் சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும் விரிவாகப் பார்ப்போம். அவையாவன..


*மொழி வரலாறு
*இலக்கிய வரலாறு
*இன வரலாறு
*தமிழ் எழுத்து வரலாறு

*மொழியின் தோற்றம்

ஒரு அமைப்போ, சமுதாயமோ தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.

 

அகழ்வு ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம் வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள், அங்கு கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு, சிந்திக்கும் திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.


சிந்தனை வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான் மொழித் தோற்றத்தின் காலமாகும்.


இவ்வாறான மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து, புரிந்து கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது ஒரு கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.


செவியால் கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப் பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே சுட்டொலிக் காலம் எனலாம்.

கேட்பொலியின் செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும் காலம் தோன்றியிருக்கலாம்.


கேட்பொலி, சுட்டொலி, சைகைகளுக்கு பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும் இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.

இலக்கியத் தோற்றம்


மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க, அறியவேண்டிய ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த கற்பனை, கற்பனையை உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம். இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.


இது போன்ற தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப் படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.


சங்க காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.


ஏட்டிலக்கிய காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.


இவ்வாறான இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள் பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத் தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.


இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல வகையுள்ளது.

இச்செய்யுள்களை படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள் இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.


விருந்தே தானும்புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
என தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.

 

11-2008 தமிழ்ச் சான்றோர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள். அன்னார் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது
***********
*********
தமிழ் மொழியின் வரலாற்றுப் பாதையில் கிறித்தவர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. சமயப் பணி புரிவதற்காகவே ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த மறைத்தொண்டர்கள் தமிழுக்கு ஆற்றியுள்ள பணி வியப்புக்குரியது.


தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத இவர்கள் தமிழைப் பயின்று, அம் மொழிக்கே வளம் சேர்த்தனர். சமயப் பணியாற்ற வந்த அவர்கள் தமிழின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து தமிழ்ப்பணியையே முழுநேரப் பணியாகக் கொண்டனர். அவர்களுள் தமிழ் இலக்கிய உலகம் மறக்க முடியாத ஒருவர் வீரமாமுனிவர்.


இத்தாலியில் இவர் பிறந்தது 1680 நவம்பர் 9ஆம் நாள். கான்சுடாண் டைன்யுசேபியுசு சோசப்பு பெசுகி என்பது இவரது இயற்பெயர். இந்தியாவில் கிறித்துவ சமயப்பணி புரிவதற்காக வந்த முனிவர், 1711 மதுரை மறைப்பணிக் களத்துக்கு வந்தார்.


மதுரைப் பகுதியில் 1606 முதல் 1645 வரை பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில் வாழ்ந்தார். காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்தார். வீர மாமுனிவரும் இவரது வாழ்க்கை முறையையே பின்பற்றினார்.

 


பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதர் என்பது வடமொழி என அறிந்தார். அவரின் தமிழ்ப்பற்று காரணமாக, அதுவே 'வீர மாமுனிவர்' என பின்னாளில் மாற்றம் பெற்றது. பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழத் தொடங்கினார்.


வீரமாமுனிவரின் தமிழ்ப்பணிகள்


1.தமிழ் அச்சுக்கலைக்கு அடிகோலியவர் கிறித்தவ குருமார்களே. 1586 ஆம் ஆண்டில் தென்பாண்டி நாட்டு புன்னைக்காயில் என்னும் ஊரில் 'அடியார் வரலாறு' என்னும் நூல் அச்சிடப்பட்டது. ஆண்டிறீக்குப் பாதிரியார் தமிழில் தொகுத்து, மொழி பெயர்த்து வெளியிட்ட இந் நூல்தான் தமிழ் மண்ணில் அச்சிட்ட முதல் தமிழ் நூல்.


2.இந்தக் காலகட்டத்தில் வீர மாமுனிவர் தமிழ் எழுத்துச் சீரமைப்பை மேற்கொண்டார். இப்போது நாம் பயன்படுத்தும் 'ஏ' 'ஓ' போன்ற எழுத்துகள் வீரமாமுனிவர் உருவாக்கியவை. அதற்கு முன் 'எ' 'ஒ' ஆகிய எழுத்துகளின் மேல் புள்ளியிட்டு மெய்யெழுத்து போல எழுதப்பட்டது.


3.எழுத்துச் சீரமைப்பு, இலக்கணம், அகர முதலி, உரைநடை என இவர் தொடாத துறைகளே இல்லை. 'தேம்பாவணி' என்னும் பெருங்காப்பியமும், 'திருக்காவலூர் கலம்பகம்' முதலிய சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப்பட்டவை. கொடுந்தமிழ் இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், திறவுகோல் (CLAVIS) முதலிய இலக்கண நூல்கள் அவர் பெயரை எப்போதும் கூறிக் கொண்டேயிருக்கும்.


4.திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்து மாபெரும் சாதனை நிகழ்த்தினார்.


5.தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றினார். 1732 ஆம் ஆண்டு இவர் தொகுத்த 'சதுரகராதி' முதல் தமிழ் அகர முதலி என்னும் பெருமை பெற்றது. இது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டது.


6.இது தவிர, 'தமிழ் - இலத்தீன் அகராதி', போர்த்துகீசியம் - தமிழ் - இலத்தீன் அகராதி என்னும் வேறு இரண்டு அகராதிகளையும் தொகுத்தளித்தார். அவற்றுள் தமிழ் - இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் பொருள் விளக்கம் செய்துள்ளார். போர்த்துகீசியம் - தமிழ்- இலத்தீன் அகராதியில் 4400 போர்த்துகீசியச் சொற்களுக்குத் தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இந்த அகராதிகளின் துணையால் அயல்நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைக் கற்பதற்கும் கதவு திறக்கப்பட்டது.


7.வீர மாமுனிவர் மேல்நாட்டு மொழிகளைக் கற்றறிந்த பேரறிஞர். அம் மொழிகளைப் போலவே தமிழிலும் உரைநடை நூல்கள் வர வேண்டுமென்று விரும்பி பல உரைநடை நூல்களை எழுதினார்.


வீரமாமுனிவரைப் பற்றி தமிழ் அறிஞர்கள் கூற்று

 


''தமிழ் உரைநடைக்குத் தந்தை தத்துவ போதகரே என்பர். அது உண்மை எனினும், இவரால் அது வளம் பெற்று மிக்குயர்ந்தது'' என்று தவத்திரு. தனிநாயகம் அடிகளார் கூறுவதை யாரும் மறுக்க இயலாது.


''18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருள் வீரமாமுனிவரும் ஒருவர்'' என்று 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எழுதிய அறிஞர் கால்டுவெல் எழுதியுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சி.யு.போப்(G.U.Pope), இவரைத் 'தமிழறிஞருள் மிகச் சிறந்தவர்' என்று போற்றியுள்ளார்.


''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடி வீர மாமுனிவரே'' என்று செக் நாட்டுத் தமிழறிஞர் 'கமல் சுவலமில்' பாராட்டியுள்ளார். எமிலியோ தேவி என்ற இத்தாலி அறிஞர், ''கீழ்த்திசை அறிஞருள் மிகவும் புகழ் பெற்றவர் வீர மாமுனிவர்'' என்று கூறியுள்ளார்.


இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளனர்.

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார்

 

இன்று 18-11-2008, இலக்கியச் செம்மல் கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தமிழ்கூறு நல்லுலகை விட்டு அவர் பிரிந்துச் சென்று 72 ஆண்டுகள் ஆகின்றன. அவருடைய நினைவாக இக்கட்டுரை பதிவாகிறது.

 

**************

செக்கிழுத்தச் செம்மல் என்று புகழப்படும் வ.உ.சி எனும் சுருக்கப் பெயருக்குச் சொந்தக்காரர் வ.உ.சிதம்பரனார் உண்மையில் தமிழ் இலக்கியத்திலும் பெருஞ்செம்மல்.

தடைகளைக் கண்டு முடங்கி விடாமல் வீறுகொண்ட மனத்தினராய் கடைசி வரை வாழ்ந்த வ.உ.சியின் வாழ்க்கை இன்றையத் தமிழர்களுக்கு நல்ல பாடமாகும்.

திருநெல்வேலி ஒட்டப் பிடாரத்தில் உலகநாதர் பரமாயி அம்மையார் வாழ்விணையருக்கு 5-9-1872இல் மூத்த மகனாகப் பிறந்தார் சிதம்பரானார். 1894-இலேயே வழக்கறிஞராகத் தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

இந்தியாவுக்குத் தொழில்புரிய வந்த ஆங்கிலேயன் நாட்டையே ஆள்வதற்கு முனைந்துவிட்ட காலம் அது. அப்போது ஆங்கிலேயனை எதிர்த்து நெஞ்சுரத்தோடு போராடிய முன்னோடிகளில் சிதம்பரனார் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலேயனின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி மக்களிடையே முழங்கினார். அதற்காகவே சொந்தமாகச் சரக்குக் கப்பலை ஓடவிட்டார்.

தமிழர் வரலாற்றில், இராசேந்திரச் சோழனுக்குப் பின் கடலில் கப்பலை விட்டவர் வ.உ.சிதான். அதனாலேயே அவர் கப்பலோடியத் தமிழன் என்ற அழியாப் புகழுக்குச் சொந்தக்காரர் ஆனார். தமிழனால் முடியாதது எதுவும் இல்லை; தமிழன் நினைத்தால் சாதித்துக் காட்டுவான் என்பதற்குக் கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி மிகச் சிறந்த முன்மாதிரி என்றால் மிகையன்று.

ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் வ.உ.சியின் கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. அவர்மீது வழக்குகள் போடப்பட்டு சிறைதண்டனையும் வழங்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, மாடுகள் இழுக்கின்ற செக்கை இழுக்கச் சொல்லி ஆங்கிலேயர்கள் கொடுமைபடுத்தினர். தோளிலும் உடலிலும் குருதிச் சொட்டச் சொட்ட அவரை அடித்து துன்புறுத்தித் செக்கிழுக்க வைத்தனர்.

சிறையிலிருந்து விடுதலையான பின்பு ஆங்கிலேயர்கள் அவரை விட்டபாடில்லை. அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்துகொண்டனர். அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பணிசெய்வதற்கும் தடை போட்டனர்.

ஆங்கிலேயனில் வல்லாண்மையில் தனக்கு ஏற்பட்ட அத்தனை இடர்களையும் துயர்களையும் வ.உ.சி வரலாற்று நூலாக எழுதினார். இலக்கியத்தரம் மிகுந்த வரலாற்று நூலாக இது அமைந்தது.

தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தார் வ.உ.சி. அவர் திருக்குறளுக்கு அகல விரிவுரை எழுதியுள்ளார். தொல்காப்பியத்திற்கும் விளக்கநூல் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகள் அனைத்தும் புரட்சி சிந்தனைகளை ஏற்படுத்துவதாக இருந்தன. தமிழில் பல நூல்களையும் புதினங்களையும் எழுதியுள்ளார். சேம்சு ஆலன் என்னும் ஆங்கில நாவலாசிரியர் எழுதிய நூல்களை இவர் மொழிப்பெயர்த்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மெய்யாரம், மெய்யறிவு போன்ற இவருடைய படைப்புகள் காலத்தால் அழியாதன.

எழுத்தில் மட்டுமல்லாது, மேடைகள் தோறும் தம்முடைய உணர்ச்சிமிகு உரைகளால் தமிழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பெரும் செல்வந்தராக இருந்தபோதும் மக்களின் துயரங்களைத் துடைத்தெறிய மக்களோடு நின்று போராடிய மாபெரும் போராட்ட உணர்வாளராக அவர் திகழ்ந்தார். அதனாலேயே, வாழ்நாள் முழுவதும் தாங்கமுடியாத துயரவாழ்க்கை வாழ்ந்தார்.

அடிமைப்பட்டிருந்த இந்தியாவையும் தாழ்ந்திருந்த தமிழர் குமுகாயத்தையும் மீட்டெடுக்க தன்னுடைய உடல், பொருள், ஆவி அத்தனையும் ஈகப்படுத்தி இறுதிவரையில் திண்ணிய மனத்தோடு போராடிய வ.உ.சிதமபரனார் 18-11-1936ஆம் நாள் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தமிழுக்காகவும் தமிழருக்காகவும் போராடி உயிர்விட்ட வ.உ.சியின் புகழ் தமிழ் உள்ள அளவும் போற்றப்படும் என்பது திண்ணம். இன்றைய இளம் தலைமுறையினர் வ.உ.சி போன்ற தமிழ்ப் பெரியோர்களின் வரலாற்றைப் படித்து விழிப்புணர்வு பெற்று எழுச்சிகொள்ள வேண்டும். தமிழ் இனம் வாழ; தமிழ்மொழி வாழ நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு போராடி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

வாழ்க ஐயா வ.உ.சி அவர்தம் புகழ்!

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.