சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த கட்டணம் அறவிடப்பட்ட இசைநிகழ்ச்சியில் வன்னியில் புகழ்பூத்த சாந்தனும் கலந்து கொண்டிருந்தார்.
அவருடன் அவரது மகனாகிய கோகுலனும் வருகை தந்திருந்ததார். நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு ஆரம்பமாகியதாகவும், இதனால் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வந்திருந்தவர்கள் பொறுமை இழந்திருந்ததாகவும், மேடையின் முன்னால் முதலில் ஆரம்பித்த வாய்த்தர்க்கம் பின்னர், இருதரப்பிற்கிடையில் கைகலப்பாக மாறி அது மேடை மீது கல்லெறியும் வரை நீடித்ததாகக் கூறப்படுகின்றது.
கல்லெறியப்பட்டதனால், மேடையில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
பாடகர் சாந்தன் கலந்து கொண்ட ஒரு குழுவும், நாட்டின் தென்பகுதியில் இருந்து அழைக்கப்பட்டிருந்த ஒரு இசைக்குழுவும் தனித்தனியாக மைதானத்தில் மேடைகள் அமைத்து பாடல்கள் பாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பாடகர் சாந்தனும் அவரது மகனுமாக சுமார் 3 பாடல்கள் பாடியதாகவும், தென்னிலங்கை குழு ஒரு பாடலைப் பாடிய நிலையிலேயே நிகழ்வில் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை நிறுத்துமாறு அறிவுறுத்திய பொலிசார், நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதாகவும், மறுநாளாகிய ஞாயிறன்று நடைபெறும் எனவும் பொலிசார் அறிவித்ததுடன், கூட்டத்தினைரைக் கலைந்து செல்லுமாறு பணித்தனர்.
இந்த நிகழ்வில் சுமார் 5000 பேர் வரையில் கலந்து கொண்டிருந்ததாகவும், குழப்ப நிலைமையைடயடுத்து முண்டியடித்துக்கொண்டு சென்றதனால் ஏற்பட்ட வாகன விபத்திலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இசை நிகழ்ச்சி குழம்பியதையடுத்து வவுனியா பேரூந்து நிலையப்பகுதியில் குழுமிய ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கலைப்பதற்காக பொலிசார் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்ச்சி குழம்பியதையடுத்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது பண்டாரிகுளம் மற்றுமோரிடத்திலும் இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலில் காயமடைந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோத்தாபய பயணம் செய்த உலங்குவானூர்தியில் கோளாறு – இறுதிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் தப்பினார்
ஞாயிற்றுக்கிழமை, 12 .06. 2011 15:42 .
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கிளிநொச்சியில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்யவிருந்த உலங்குவானூர்தியில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருந்தது கடைசிநேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கிளிநொச்சி சென்றிருந்தார். கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.
தெற்காசியாவில் மிக உயரமான இந்தத் தொலைத்தொடர்புக் கோபுரம் அடிப்படையில் இராணுவத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படவுள்ளது. சிறிலங்கா அரச தொலைக்காட்சி, வானொலிச் சேவைகளைத் தரமுயர்த்தவும் இது பயன்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை எதிர்காலத்தில் இதனை வர்த்தகப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டமும் உள்ளது. இந்தக் கோபுரத் திறப்பு விழாவுக்கு சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் புறப்பட முன்னரே ரணில் விக்கிரமசிங்கவின் தயார் நளினி விக்கிரமசிங்கவின் மரணச் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.
மாலையில் இறுதிநிகழ்வுகள் நடைபெறவிருந்ததால் சிறிலங்கா அதிபரும் கோத்தாபய ராஜபக்சவும் அவசரமாக கொழும்பு திரும்ப முயன்றனர். அவர்களை ஏற்றிச் செல்ல முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு உலங்குவானூர்திகள் கிளிநொச்சியில் காத்திருந்தன.
அவற்றில் ஒன்றில் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் மாலை 5 மணியளவில் கொழும்பு திரும்பி நளினி விக்கிரமசிங்கவின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தினார்.
ஆனால் கோத்தாபய ராஜபக்ச வரவில்லை. அவரும் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவும் பயணம் செய்வதற்காக உலங்குவானூர்தியில் ஏறி அமர்ந்திருந்த நிலையில்- அதில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுபிடித்தார்.
இதனால் அதில் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என்று விமானி கூறியதால், வேறொரு நிரந்தர இறக்கை விமானம் மூலம் கோத்தாபய ராஜபக்ச கொழும்பு வர நேரிட்டது.
உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறு கடைசிநேரத்தில் கண்டிபிடிக்கப்படாது போயிருந்தால், நடுவானில் பாரிய விபத்து ஒன்றை சந்திக்க வேண்டியிருந்திருக்கும் என்று சிறிலங்கா விமான்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.