* அமெரிக்காவில், சர்வதேச கல்வி சங்கம், ஐ.எஸ்.ஏ.யின் தலைவராக இந்திய வம்சாவளி பேராசிரியர் டி.வி. பால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச கல்வியைப் பொருத்தமட்டில் இந்த அமைப்பு உலகளவில் மதிப்பும், மரியாதையும் பெற்றிருக்கிறது.
* ஏமன் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் பிணைக்கைதிகளாக இருந்து வந்த அமெரிக்க பத்திரிகையாளர் லூக் சோமர்ஸ், தென் ஆப்பிரிக்க ஆசிரியர் பியரே கொர்க்கி ஆகியோரை மீட்க அமெரிக்க, ஏமன் படைகள் கூட்டு தாக்குதல் நடத்தின. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பிணைக்கைதிகள் இருவரும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட காரணம் அமெரிக்காதான் என அல்கொய்தா தீவிரவாத இயக்கம் கூறி உள்ளது. பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பதிலாக தாக்குதல் நடவடிக்கையை எடுத்தது, முட்டாள்தனமான செயல் என அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
* மலேசியாவில் பினாங் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் நாட்டினர் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மலேசிய போலீசார் விசாரணை நடத்தி 20 பேரை கைது செய்துள்ளனர்.
* மேற்கு கரையில் நடந்த போராட்டம் ஒன்றின்போது, ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன மந்திரி ஜியாத் அபு ஈன் உயிரிழந்தார். இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை நடத்திய ஜோர்டான், பாலஸ்தீன டாக்டர்கள், அவர் கண்ணீர்ப்புகையை சுவாசித்ததாலும், மருத்துவ சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதாலும் மரணம் அடைய நேரிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக இஸ்ரேல் வட்டாரங்கள் கூறுகின்றன.