பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் மக்களை ஏமாற்றி பிச்சையெடுத்த பரம்பரை பிச்சைக்காரர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழிந்த ஆடை, சோகமான கதை, பிச்சைப் பாத்திரம் என்று சோகமாக நகரத்தெருக்களில் வலம் வரும் இவர்கள், விமானத்தில் சொகுசுப்பயணம் மேற்கொள்வது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அங்கு பிச்சையெடுத்த சிலரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊர் ஊராக வேலைக்கு செல்வதாகவும், வீட்டுக்கு திரும்ப முடியாமல் வறுமையில் வாடுவதாகவும் சொன்ன பிச்சைக்காரர்கள் பிப்ரவரி 19ல் கொண்டாடப்பட இருக்கும் சீன புத்தாண்டு விழாவைக் கொண்டாட பணம் சேர்ப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுவரை ஒவ்வொருவரும்130 டாலர் பணம் சேர்த்திருப்பதும், பிடிபட்ட ஒருவரிடம் ஐ போன் 6 ப்ளஸ் எனும் அதிநவீன செல்போன் இருந்ததும் காவல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்தது.
சீனாவில் பிச்சைக்காரர்கள் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், பிச்சை எடுப்பவர்கள் போலியானவர்கள் என்று 82.3 சதவீதம் பேர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.