அமெரிக்காவில் மேரிலாண்ட் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக உள்ள இந்திய அமெரிக்கர் குமார் பி.பார்வே, அந்த சபையின் சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து கொள்கை குழுவின் தலைவர் ஆகிறார். இதற்கான அறிவிப்பை சபாநாயகர் மைக்கேல் புஸ்க் வெளியிட்டுள்ளார்.
* அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் ராகுல் குப்தா, மேற்கு வெர்ஜீனியாவில் பொது சுகாதாரத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அந்த துறைக்கான மந்திரிசபை செயலாளர் கேரன் எல்.பவுலிங் வெளியிட்டிருக்கிறார்.
* ஆப்கானிஸ்தானில் 1996-2001 ஆண்டுகளில் அமைந்திருந்த தலீபான்கள் ஆட்சிக்கு அங்கீகாரம் அளித்தது பாகிஸ்தான் செய்த முட்டாள்தனம் என அந்த நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரப் இப்போது கருத்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தோன்றுவதற்கு மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும்தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
* ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து பிரான்ஸ் போர் விமானங்கள் நேற்று குண்டு வீச்சு நடத்தியதாக அந்த நாட்டின் ராணுவ மந்திரி ஜீன் லீ டிரையன் நேற்று அறிவித்தார். ஆனால் சேத விவரம் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
* பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘ஹேகுபிட்’ புயல் ஆபத்து காரணமாக ஆயிரக்கணக்கான கிழக்கு கடற்கரை பகுதி மக்களும், நிலச்சரிவு ஆபத்து வாய்ப்பு உள்ள மத்திய பிலிப்பைன்ஸ் மக்களும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.