இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வலி. வடக்கில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பொலிஸாரால் கொல்லப்பட்ட தொழிலாளர் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்கிய அரசு, அரச படையினால் வகை தொகையின்றிக் காட்டு மிராண்டித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நஷ்ட ஈடாக எதையும் வழங்கத் தயாராக இல்லை.
விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் இல்லை. காணாமற்போன ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.
இப்படி நாம் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கும் போது நமது தமிழ் அமைச்சரின் ஏற்பாட்டில் தமிழ் யுவதிகளை மேடைகளில் ஏற்றி களியாட்டம் போட அழைக்கின்றனர்.
1943ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியம் என்ற சிந்தனையை ஆரம்பித்த தந்தை செல்வா, "கிழக்கைக் காப்பாற்ற வேண்டும்' என்றார். இப்போது தந்தை செல்வாவின் சொந்த மண்ணைக் காப்பாற்றுவதற்காகப் போராட்டம் நடத்தவும், உண்ணாவிரதம் இருக்கவும் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் எப்பொழுதும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்கள். சனாதிபதி மகிந்த ராசபட்ச "ஐந்து அமைச்சுப் பதவிகளைத் தருகிறோம், அரசுடன் இணைந்து செயற்பட வாருங்கள்'' என எமக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் நாங்கள் அதனை நிராகரித்து விட்டோம். பட்டம் பதவிகளுக்காகவும், அமைச்சுகளுக்காகவும், தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கவும், அரசுக்கு வால் பிடிக்கவும் நாம் தயாராக இல்லை.
இரண்டு தசாப்தங்களுக்குப் பின் நாம் நமது சொந்த மண்ணில் காலடி வைத்துள்ளோம். இதனை மீட்டெடுக்க எத்தனை போராட்டங்களை நடத்தினோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இன்று மக்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு. உங்களுடைய பலத்தால் இன்று சர்வதேச மட்டத்தில் குரல் எழுப்புகின்றோம். உண்மை நிலையை உலகறியச் செய்துள்ளோம்.
அரசு வடக்கையும் கிழக்கையும் பிரித்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கிழக்கில் மக்கள் அதனை ஏற்கவில்லை. ஒற்றுமை உணர்வுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்தனர்.
நாம் கடைசிவரை ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். நமது தியாகமும் 25 வருடப் போராட்டமும் வீணாகிவிடக்கூடாது என்றும் மாவை சேனாதிராசா கூறினார்.