குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

செயலலிதாவின் உரைக்கு இந்தியக் கொள்கை சரிவருமா?ஈழத்தமிழர் விவகாரத்தில் மெளனம் சாதிக்கும் இந்திய அரசு

இலங்கையில் இடம்பெற்ற நான்காம் கட்ட ஈழப்போரில், இலங்கை அரசாங்கத்தால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுடன், இலங்கைத்தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதியானதோர் தீர்வை வழங்குவதை உறுதிப்படுத்துதல் தொடர்பாகவும், இலங்கை மீதான தனது கொள்கையை இந்திய மத்திய அரசு மீள்பரிசீலிக்கவும் அதன்மீது தான் அழுத்தம் கொடுப்பேன் என, அண்மையில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா ஊடகவியலாளர்களுடனான தனது முதற் சந்திப்பில் தெரிவித்துக்கொண்டார்.

சரியான தருணத்தில் ஜெயலலிதாவின் ஆதரவு தமிழ் மக்களுக்குக் கிடைத்ததை, உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரங்கள் உள்ளன? என்கின்ற கேள்வி எழும்பியுள்ளது. இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தனது அயல்நாடுகள் தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையானது ஏதாவது பிரச்சினைகளால் அல்லது குழப்பத்தால் திடீரென முறிவுக்கு வந்துவிடுவது வழமையானதாகும்.

இந்திய-பாகிஸ்தான் உறவின் விரிசலானது ஜம்மு-காஷ்மீர், பஞ்ஜாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் பிரச்சனையானது இதைப் போன்றே, சீனாவுடனான இந்திய உறவின் விரிசல் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், உத்தர பிரதேசம், உத்தராஞ்சல், ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சினைகளுக்கான காரணமாகும்.

இந்திய - பூட்டான் உறவின் சிக்கல், மேற்கு வங்காளம், அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்தது. இதையொத்ததாகவே, மியான்மார் நாட்டுடனான உறவில் ஏற்பட்ட விரிசலானது அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மணிப்பூர் போன்றவற்றில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

இந்திய - பங்காளதேஷ் உறவில் ஏற்பட்ட சிக்கல் மேற்கு வங்காளம், மெகாலயா, திரிபுர, அசாம் போன்ற இடங்களில் ஏற்பட்ட பிரச்சினையானது இவற்றை ஒத்ததாகவே இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றம் தமிழ்நாட்டிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். இந்தியாவின் அரசியல் யாப்பின் பிரகாரம், வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குவதும் நடைமுறைப்படுத்துவதும் மத்திய அரசாங்கத்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.

ஆனால் உண்மையில், தனது மாநில அரசுகளின் நலனைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் இந்திய மத்திய அரசு அது சார்ந்த வெளியுறவுக் கொள்கையை சில சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தவகையில், இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்திய மத்திய அரசிற்கும் மாநில அரசுகளிற்கும் இடையில் பிளவுகளை உருவாக்கியுள்ளன.

ஆனால், இது இந்தியா மட்டும் சந்தித்துள்ள பிரச்சினையாக இருக்கவில்லை. அமெரிக்கா, சீனா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற நாடுகளிலும் இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன.

யூகோசிலோவியா உடைவதற்கு முன்னர் அங்கிருந்த அனைத்து மாநிலங்களும் தமக்கான வெளியுறவு விடயங்களைக் கையாள்வதற்கான துறைசார் பிரிவுகளை வைத்திருந்தன. சகல மாநிலங்களும் தமக்கான பிரத்தியேக வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் இதன் ஊடாக குறிப்பிடவில்லை. மாறாக, நான் கேட்பது என்னவென்றால், பூர்வீக இந்திய மாநிலங்களின் விருப்பங்களும் மத்திய அரசால் பாதுகாக்கப்படுவதான ஒரு ஆட்சிமுறை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு நன்மையான ஒரு விடயம், இந்திய மத்திய அரசிற்குப் பாதகமாய் இருக்கும் என்று அர்த்தம் இல்லை. இன்னொரு வகையில் சொல்வதானால், மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்படும் விவகாரத்தில், மாநில அரசுகளினது ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது எவ்வாறு தமிழ்நாட்டு நலனைப் பாதித்துள்ளது என்பதற்கு இங்கு சில எடுத்துக்காட்டுகள் உண்டு.

இலங்கையிலிருந்த இந்தியத் தமிழர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக 1964இல் சிறிமாவோ - சாஸ்திரி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்டபோது இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தொடர்பாக எவரும் கவனத்தில் எடுக்கவில்லை. அப்போது தமிழ்நாட்டிலிருந்த காமராஜ் நாடர், வி.கே. கிருஸ்ணமேனன். சி.என்.அண்ணாத்துரை, பி.ராமமூர்த்தி போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த உடன்படிக்கை தொடர்பாக தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்த மக்களின் நலன்களைப் பாதுகாப்பதைவிட இலங்கை அரசாங்கத்தின் உறவினை மேலும் வலுப்படுத்துவதிலேயே, அப்போது இந்தியாவின் பொதுநலவாய செயலாளராக இருந்த சி.எஸ்.ஜாவின் ஆலோசனையைப் பெற்றிருந்த இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி செயற்பட்டார்.

1974, 1976களில் இந்திய - இலங்கை கடல் எல்லை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் இதற்கான இரண்டாவது எடுத்துக்காட்டாகும்.

இந்த உடன்படிக்கையால், ராஜா ராம்நாத்தின் சமிந்தரிக்குச் சொந்தமான கச்சதீவானது இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது மட்டுமல்லாது, இந்திய மீனவர்களால் கச்சதீவில் காலதிகாலமாக மேற்கொள்ளப்பட்ட மீன்பிடிக்கும் உரிமையும் பறிபோனது.

இதையொத்ததாகவே, 1950 இந்திய மத்திய அரசாங்கம், பேரு பரியை கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துக் கொடுக்க முற்பட்டபோது, அவ்வேளையில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த B.C.றோய், இந்திய மத்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

இதன் மூலம், இந்தியாவின் நிலப் பகுதியைக் கிழக்கு பாகிஸ்தானிடம் கைமாற்றப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், 1974இல் இந்தியாவால் கச்சதீவு இலங்கையிற்குக் கைமாற்றப்பட்ட போது, அப்போது தமிழ்நாட்டை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகம் அதற்கெதிராக ஏன் எவ்வகையிலான சட்ட ரீதியான முயற்சியையும் எடுக்கவில்லை என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இவற்றின் விளைவாக, பாக்கு நீரிணையில் இலங்கையின் பக்கமிருக்கும் செறிந்த மீன்பிடிக் கடல் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமிடையிலான முறுகல் கடலாக மாறி, ஏரளமான இந்திய மீனவர்களின் உயிர்களைக் குடித்தது. தனது அயல் நாட்டிற்குள் இடம்பெறும் நகர்வுகளில் இந்தியாவின் தலையீடானது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அமைந்திருக்கும் என்பது தெட்டத் தெளிவானதாகும்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் 1983இல் லோக் சபாவில் உரையாற்றிய அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டிக்காட்டியது போல அது ‘வெறும் இன்னொரு நாடல்ல’ என்பதும், அதன் உறுதித்தன்மையில் மட்டுமல்லாமல், அங்கு வாழும் தமிழ் மக்களின் கெளரவத்திலும் நலனிலும்கூட இந்தியாவின் நலன்கள் தங்கியுள்ளன.

இந்த பின்னணியில், தம்மீதான மனித உரிமை மீறல்களைச் சர்வதேச மயப்படுத்துவதில் தமிழர்களுக்கு இந்தியா உதவியது மட்டுமல்லாமல், தமிழர் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வுகாண முயற்சித்தால், இந்தியா வெறுமனே பார்த்துக்கொண்டிருக்காது என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியது. இத்தகைய செயற்றிறனான கொள்கையுடனேயே, மே 1987இல் யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் வீசின. எந்தவொரு நாடுமே அப்போது இந்தியாவிற்கு எதிராக ஒரு விரலைக்கூட நீட்டவில்லை.

ஆனால் 1987 இலிருந்து, இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையானது தனது மிக மோசமான நிலைக்கு மாறத்தொடங்கியது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர், தமிழ் மக்களுக்கு எதிரான போராக இலங்கையில் மேற்கெள்ளப்பட்ட நான்காம் கட்ட ஈழப் போரில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது, இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இவற்றோடு சேர்த்து, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு இந்தியா பாதுகாப்பை வழங்கியது. இதில் வெட்கக்கேடு என்னவெனில், ரஸ்யா, சீனா கும்பலோடு சேர்ந்தே இந்தியாவும் இலங்கைக்கான ஆதரவை வழங்கியது. ஆனால் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் இலங்கை அரசாங்கம் சார்பான கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு வெறுமனே பார்வையாளராக இருந்துவிடாது என்பதை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு உரை உறுதிப்படுத்தியுள்ளது.

வி.சூரியநாராயணன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.