இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது.
ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக இருந்து வருவது சிறிலங்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது அடுத்த கூட்டத்தொடர் பற்றிய அச்சத்தை சிறிலங்காவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ், பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக ஆகியோர் கடந்தவாரம் முழுவதும் தமக்கு ஆதரவு தேடி இரவுபகலாக பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்தவாரம் முழுவதும் இந்த நால்வரும், அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து, கைகுலுக்கி நண்பர்களைத் தேடுவதிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொலிப் பதிவு தொடர்பான, அனைத்துலக விசாரணைகளைக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, இவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வாரஇதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது
இரகசியமாக புதுடெல்லி சென்ற கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், கடந்தமாதம் 26ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.
இந்தியாவின் இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தி சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட இவர் எத்தனித்த போதும், இந்தியத் தரப்பு தமது கடும் போக்கில் இருந்து இறங்கி வரவில்லை.
இதனால் பசில் ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து உடனடியாகவே கொழும்பு திரும்பினார்.
இந்தநிலையிலேயே கோத்தாபய ராஜபக்சவும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்திய அரசின் நிலைப்பாட்டை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
கடந்தமாத இறுதி வாரத்தில் இவர் புதுடெல்லி சென்றிருந்தார்.
இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் மகளின் திருமணத்துக்காகவே கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றதாக கூறப்படுகின்ற போதும், அவரது பயணத்தின் பிரதான நோக்கம் இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பதேயாகும்.
இந்தியாவின் நிலைப்பாட்டை நெகிழ்வுபடுத்தும் வகையில், கோத்தாபய ராஜபக்ச இந்திய இராஜதந்திரிகள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் இவரால் இந்திய உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க முடியவில்லை.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு கூறப்பட்ட அதே விடயங்களையே கோத்தாபயவுக்கும் இந்திய இராஜதந்திரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.