05.06.2011 வடக்குக் கிழக்குப் பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் கிடைக்கப்பெறவில்லையென குற்றஞ்சாட்டி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் வி. கே சகாதேவன் என்பவர். வவுனியாவைச் சேர்ந்தவர்
எனக் கூறப்படுகின்ற இவர் தனது சகபாடிகள் ஐவர் சகிதம் இந்த உண்ணாவிரதப்
போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இன்று காலை திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய மரத்திற்கு முன்னதாக வந்து சேர்ந்த அவர் ஏற்கனவே தாம் எடுத்துவந்த பதாதைகளையும் அங்கு தொங்கவிட்டிருக்கின்றார். இதனிடையே அவருக்கு ஐம்பதுக்கும் அதிகமான படையினர் இப்போது பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென அவர் கூறுகின்றார்.
ஏற்கனவே இந்தியாவின் சர்ச்சைக்குரிய வகையில் மதகுரு ஒருவர் ஊழல்
மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கின்றார். அதேமாதிரியாகவா சகாதேவனின் உண்ணாவிரதமும் அமைகின்றதாவென்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
எனினும் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களை சிதைக்கும் ஒரு உத்தியாக அவர்களின் போராட்டம் உள்ளதாவென கேள்விகளும் எழுந்துள்ளன. புலம் பெயர்ந்த நாடுகளில் ஐ.நா.வின் போர்க் குற்றத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றி அவர் தனது காத்திரமான விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.
உயிரிழந்தவர்களின் சடலங்களைக் காட்டுவதன் மூலம் எதனைப் பெறமுடியுமென அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதே போன்று இலங்கை அரசாங்கத்தை சீற்றமடையச் செய்வதன் மூலம் எந்தவொரு பலாபலன்களை அடையமுடியாது. இவர் தொடர்பான விபரங்கள் நாளையதினம் வெளியாகுமென
எதிர்பார்க்கப்படுகிறது.