03 .06. 2011 நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராயசிங்கம், நடராயா ரவிராச் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில்சனாதிபதி மகிந்த ராயபட்ச மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும்
இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராயபட்ச இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு காரணமாகவே இந்த இரண்டு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் எவருக்கெதிராகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. இந்தக் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முயற்சித்த போதிலும் கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் குறித்து தெரியவந்ததாகவும், அதுசம்பந்தமான சாட்சி ஆவணங்களை பாதுகாப்புச் செயலாளர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விடுதலைப் புலி அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் பல தகவல்கள் தற்போது பாதுகாப்புத் தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் செய்த முக்கியமான கொலைகள் சம்பந்தமாகவும் தெரியவந்துள்ளது. எனினும், இந்தத் தகவல்களின் அடிப்படையில் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாகவோ அவர்களின் உதவியுடன் செய்யப்பட்டதாகவோ உறுதிப்படுத்துவதற்கான எவ்வித சாட்சிகளும் இல்லை.
2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை லான்ஸ் கோப்ரல் சங்கர் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியே சுட்டுக்கொன்றுள்ளார். இந்தக் கொலைக்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியிருந்தவர் தற்போதைய அரசாங்கத்தின் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாவி வீதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்புப் படையணியில் பணியாற்றிய லான்ஸ் கோப்ரல் சங்கர், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தின் பேரில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவராவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான அவருக்கு புலிகளினால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கருதி அவர் கருணாவுடன் இணைந்துகொண்டார்.
சங்கரின் பக்கசார்பற்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக பரராஜசிங்கத்தை சுட்டுக்கொல்லுமாறு கருணா, சங்கருக்கு உத்தரவிட்டிருந்தார். பரராஜசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் கருணாவின் உத்தரவை செயற்படுத்த சற்று தயங்கியுள்ளார். இது பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவு என்பதால் எவ்வித அச்சமும் இன்றி துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு கருணா கூறியுள்ளார்.
இதனடிப்படையில், மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்துள்ள கருணாவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியினால் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை, சங்கர் சுட்டுக்கொன்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெற்றியடைந்ததை அடுத்த அன்றைய தினம் அதிகாலை சங்கரை தன் முன்னால் வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கருணா, நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்துள்ளார்.
அதேபோல், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நிஷாந்த கஜநாயக்க, இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர் சம்பத் ஆகியோரின் வழிக்காட்டலில் கருணா தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர், 2006 நவம்பர் 9ஆம் திகதி கொழும்பு நாராஹேன்பிட்டியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை சுட்டுக் கொன்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நிஷாந்த கஜநாயக்க அப்போது விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக சேவையாற்றினார். லெப்டினன் கமாண்டர் சம்பத், கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றினார்.
பின்னர் இவர்கள் இருவரும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட துணை இராணுவப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நிஷாந்த கஜநாயக்கவிடமே ரவிராஜை கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இதனை, கஜநாயக்க, நேவி சம்பத்திடம் ஒப்படைத்திருந்தார்.
இதன்படி, சீலன், கிரன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்த இரண்டு துணை இராணுவத்தினரைப் பயன்படுத்தி ரி.56 ரக துப்பாக்கியின் மூலம் ரவி ராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கி கடற்படை புலனாய்வுப் பிரிவின் விசேட இரகசிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியாகும்.
நிஷாந்த கஜநாயக்க, நேரடியாக பாதுகாப்பு அமைச்சில் செயல்பட்டுவந்ததுடன் துணை இராணுவத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். கஜநாயக்க, எந்தவொரு வீதிச் சோதனைச் சாவடியிலும் துப்பாக்கியுடன் இலக்குத் தகடு அற்ற வாகனங்களில் செல்லக் கூடிய வகையில் பாதுகாப்பு அமைச்சினால் அவருக்கு விசேட அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
மேற்படி தகவல்கள் வெளியானதை அடுத்து உடனடியாக விசாரணைகளை நிறுத்துமாறு உத்தரவிட்ட பாதுகாப்புச் செயலாளர், விசாரணை சம்பந்தமான ஆவணங்களையும் தன்வசம் எடுத்துக்கொண்டார்.