31 .5. 2011.த.ஆ.2042-- அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்..சீனா, கியூ, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என கியூபா தெரிவித்துள்ளது. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க மற்றும் இஸ்லாமிய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என குறித்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இஸ்லாமிய பேரவையின் சார்பில் பாகிஸ்தான் தூதுவர் ஸாமிர் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகியன வலியுறுத்தியுள்ளன.