தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கருணா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராக தற்போது பதவி வகிப்பது யாவரும் அறிந்ததே. இம் முறை நடைபெறவிருக்கும் தேர்தலிலும் தாம் போட்டியிடாமல் தேசியபட்டியல் மூலம் தன்னை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார் என்று கருணா கண்ட கனவில் மண் விழுந்துள்ளது. அவ்வாறு இம் முறை நடக்காது என்று ஜனாதிபதி கருணாவிடம் நேரடியாகத் தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
தமிழ் மக்கள் விரும்பிய தலைவர்களைத் தெரிவுசெய்ய அந்த மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுமாறு கருணாவிற்கு அரசதலைவர் மகிந்த அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனடிப்படையில் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளமை தெரிந்ததே. இதனால் இனி நடக்கவிருக்கும் தேர்தலில் மட்டக்களப்பில் வெல்லமுடியுமா என்று படு ஏக்கத்துடன் இவர் அலைந்து திரிவதாக மேலும் செய்திகள் வெளியாகியுள்ளது