இலங்கையின் வன்னியில் யுத்த முனைப்புகள் தீவிரம் பெற்றிருந்த போது பெருமளவிலான குடும்பங்கள் படகுகள் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையை வந்தடைந்தன.
இத்தகைய குடும்பங்கள் கடந்த இரு மாதங்களின் முன்னர் விடுவிக்கப்பட்டதுடன் இவர்களது படகுகளும் தற்போது கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசம் இதுவரை விடுவிக்கப்படாமையால் படகுகளை மீளப்பெற்ற போதும், இத்தகைய குடும்பங்கள் பெரும் சிரமங்களின் மத்தியிலேயே திருகோணமலையில் உள்ள தங்கள் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
விடுவிக்கப்பட்ட தங்கள் படகுகளையும் இவர்கள் புல்மோட்டையில் தங்களுக்கு அறிமுகமானோரின் பொறுப்பில் விட்டு விட்டே திருகோணமலையில் தங்கியுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதே வேளை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் குடாநாட்டைச் சேர்ந்தோர் மற்றும் மீள்குடியேற்றம் நடைபெறும் பகுதிகளைச் சேர்ந்தோர் கடல்வழிப்பாதை வழியாக தங்கள் படகுகளைக் கொண்டு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.