அமெரிக்காவில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி கைப் பற்றி உள்ளதால், ஒபாமாவின் செல்வாக்கு சரியத் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க செனட் சபைக்கும், மாகாண கவர்னர், மாகாண பிரதிநிதிகளுக்கான பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடிப்படையில் , அந்நாட்டு செனட் சபையில் அதிக இடங்களைக் குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது. அக்கட்சி சார்பில் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே மீண்டும் கவர்னர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், குடியரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதன் மூலம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிய வருகிறது. தேர்தல் முடிவுகளின்படி செனட் சபையில் குடியரசு கட்சிக்கு 52 இடங்களும், ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் செனட் சபையை அமெரிக்காவின் மிகப்பழமையான கட்சியான குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.