உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது குன்றக்குடி அடிகளாரால் துவங்கப்பட்ட திருக்குறள் பேரவை, தற்போது உலக திருக்குறள் பேரவையாக வளர்ந்துள்ளது. திருக்குறளுக்கு எழுத்துப்பணி, சொற்பணி, செயல்வடிவம் அளித்தவர்கள் உண்டு. எழுத்து, சொல், செயல் என்று ஒருங்கிணைத்து திருக்குறள் பணியாற்றியவர், பணியாற்றுபவர் நமது தமிழக முதல்வர் கருணாநிதி என்றால் அது மிகையல்ல.
திருவள்ளுவருக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. காரணம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமாரியில் திருவள்ளுவருக்கு திருவருவச்சிலை, பெங்களுரில் 18 ஆண்டுகளாக முடக்கப்ட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது,1330 குறள்களை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பொற்கிழி விருது, குறளோவியம், திரு வள்ளுவர் ஆண்டை தமிழ்புத்தாண்டாக அறிவித்தது போன்ற செய்லகள் மூலம் திருக்குறள் மீது கருணாநிதிக்கு உள்ள உள்ளத்து ஈடுபாட்டை காணலாம்.
இதன் மூலம் திருக்குறள் பணியில் வாழ்நாள் சாதனையாளராக கருணாநிதி விளங்கி வருகின்றார். எனவே, இந்த பேரவை மூலம் தமிழக முதல்வருக்கு வரும் 10 ம் தேதி சென்னையில் திருக்குறள் பேரொளி பட்டம் வழங்கப்பட உள்ளது என்றார்.