குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இன்றைய சூழலில் தமிழ் நாயன்மார்களின்.....

தமிழனை அழித்த சிவபெருமானே
மிஞ்சிய தமிழனை வருத்தும் எம்பெருமானே
உந்தனாடை தமிழனின் தோலா
உன் கைத்தீ தமிழினத்திற்குக் கொள்ளி வைக்கவா
உந்தன் உடுக்கை எதிரியின் போர் முரசா
மண்டை ஓடு தமிழனின் ஓடுகளா
பூசிய நீறு தமிழனின் சாம்பலா
காலில் போட்டு மிதிப்பதும் தமிழனையா?
காலைத்தூக்குவதும் தமிழனை அடிக்கவா
எம்மை அழித்த சிவபெருமானே

 

முருகன் என்றோம்
தமிழ்க் கடவுள் என்றோம்
ஆறுமுகன் என்றோம்
பன்னிரு கரம் என்றோம்
பகைபோக்க ஆறுபடை
வீடுடை முருகன் வருவான்
என்றிருந்தோம் வரவில்லை
பகை வந்து சூழந்து
தமிழன் மாண்டபின்
நீ மயிலேறி வரவேண்டுமா?

பல இராத்திரி வணங்கினோம்
நவராத்திரியில் வருவாய் என்று
ஏமாத்திய தமிழ் தேவியே
தமிழன் மரணமானபின்
உந்தன் வீரமேன் செல்வமேன்
கலைமகளே உயிர்வாழவே
உயர்வு பெறவே கல்வி !
உக்கி இத்து செத்துப்போன
தமிழினத்தின் ஒப்பாரிக்கு
உந்தன் கலை வேண்டுமா?

மாடு மேய்க்கும் கண்ணா
தமிழ் மண்ணை சுடுகாடு ஆக்கும் மணிவண்ணா
ஆரியனை மட்டுமா காத்து அருள்வாய்
தமிழை அழித்த சக்கரமும் 
சாவீட்டில் ஊதும் சங்கும் உன் கைப்பிடித்து 
தமிழனைக் கொல்வதென்றே முடிவெடுத்தாய்
திருப்பதியில் பெருமாளாய்க்
கண்மூடி நின்றாய்.


பத்தாம் நூற்றாண்டில் முதல் 
கடவுளாய் வந்தவனே
பலம்மிக்க யானை முகத்தோனே
தும்பிக்கையான் காப்பான்
சங்கத்தமிழ் மீட்பான்
என்றிருந்தோம்
மகாபாரதம் எழுதியவனே
தமிழ்ப் பாரதத்தை 
மரண பாரதமாய் எழுதியதேனப்பா?


உலகமெலாம் தமிழர் அழ
இலங்கைத்தமிழர் மாழ 
அதனை மகிழ்ந்து பாடி
வேதமோதுவோர் வேண்டி நின்றனர்
இவ்வுலகு தனிலே.......

பூநகரி பொன்னம்பலம். முருகவேள் ஆசிரியர் சுவிற்சர்லாந்து   2009  வைகாசி உணர்வலைகளின் வரிகள்-25.05.2009.