நில பேரம் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷுக்கு எதிராக, ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில், மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய உயர் அதிகாரி ஒருவர் இத்தகயை நடவடிக்கையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாதம் 31-ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவச் செயலர் மீதான குற்றச்சாட்டை அடுத்து, முதலில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற ராணுவ அதிகாரிகள் மீது வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும்போது, ராணுவச் செயலர் அவதேஷ் பிரகாஷுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ராணுவத் தளபதியின் உத்தரவை நிராகரித்து, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சுக்னா ராணுவ நிலையம் அருகே அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்க, ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க, அவதேஷ் பிரகாஷ், மற்ற நான்கு ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.