தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள் குறித்து கவனம் செலுத்துவதாக ஐ.நா செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வெவேறான அறிக்கையில் தெரிவித்துள்ளன. இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வன்முறையற்ற முறையில் நடாத்துவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அமைதியான காலப்பகுதியில் நடைபெறும் முதலாவது நாடு தளுவிய தேர்தல் நீண்ட கால அமைதியையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஐ.நா செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை பணிப்பாளர் கத்தரின் அஸ்டன் தனது அறிக்கையில்,இலங்கையில் தேர்தலுக்கு முன்னரான வன்முறைகள், மரணங்கள் குறித்து கவன செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள அவர் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் நீண்டகால சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வன்முறைகளற்ற தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இரண்டு பிரதான தரப்பினருக்கும் இடையிலான முறுகல்களினால் வாக்களிப்பில் சகலரும் கலந்து கொண்டு தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவார்களா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.