டென்மார்க்கில் குறைந்த வயதிலேயே ஓய்வூதியம் பெறுவோர் தொகை அதிகரித்து வருவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடி,வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணிகள் வயது கூடியவர்களை ஓய்வூதியத்தின் பக்கமாக விரட்டிக் கொண்டிருப்பதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைத்தகமை உள்ள பல பெரியவர்களை இழந்துவிடும் அபாய நிலையில் டேனிஸ் வேலைச்சந்தை இருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. தற்போது 67 வயது ஓய்வூதிய வயதாக இருந்தாலும் சராசரியாக 63.5 ஓய்வூதிய வயதாக இருக்கிறது. ஓய்வூதியம் பெற விரும்புவோரை பதவிகளில் இருந்து விலக விடாது கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடமிருந்து ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. முதியோருக்கான வேலை நேரத்தை 20 மணி நேரமாகக் குறைத்து, ஐந்து வாரம் விடுமுறை வருடத்தில் வழங்கலாம் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. கடந்த 1998 ல் இருந்து 2008 வரை டென்மார்க்கில் பல கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளன. 1999 ஏப்ரலுன் சீர்திருத்தம், 2003 முன்னைய ஓய்வூதிய சீர்திருத்தம், 2004 பென்சனுக்கு போகாமலிருக்க விசேட சலுகை என்று பல வழிகளிலும் அரசு போராடினாலும், போதுமடா சாமி என்ற குரல்களே பரவலாகக் கேட்கிறது.