நீ பேசுவது தமிழா...
இயற்றியவர்: உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நீ பேசுவது தமிழா?அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
தமிழின் பெருமை
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
- பாவேந்தர் பாரதிதாசனார்.
இர.ந.வீரப்பனார். தமிழையும் – தமிழரையும் – தமிழர் வாழ்வையும் ஆராய்வதையே தம்முடைய வாழ்நாள் பணியாக மேற்கொண்டவர் ஐயா இர.ந.வீரப்பனார். ஏறக்குறைய 43 நாடுகளுக்குப் சுற்றுச்செலவு(பயணம்) மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களிடம் உறவு பாராட்டியவர் - கள ஆய்வுப்பணி செய்தவர். 40 நாடுகளில் வாழும் தமிழருக்காக – தமிழ் வாழ்வுக்காகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
தம் வாழ்நாளில் 33 அரிய நூல்களை எழுதி வெளியிட்டு, மலேசியத் தமிழர்களுக்கே பெருமை தேடிக் கொடுத்தவர் – உலகத் தமிழரிடையே மலேசியத் தமிழையும் தமிழரையும் அறிமுகம் செய்துவைத்தவர். உலகத் தமிழர்களையும் அவர்களின் அயலக வாழ்வையும் மலேசியத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியவர்.
ஐயா.இர.ந.வீரப்பன் அவர்கள் 8.6.1930இல் கண்டி நுவரேலியா தோட்டம், இலங்கையில் பிறந்தவர். இருந்தாலும், அவர் வாழிடமாக நமது மலேசியாவைத் தேர்ந்து கொண்டார். இவருடைய பெற்றோர்கள் நடேசன் – இரத்தினம் வாழ்விணையர். இவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறினார்.
மலேசியாவையே தாய்நாடக ஏற்றுக்கொண்டு மலேசியத் தமிழருக்காகவே தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்புக்கொடுத்தார். தொடக்கத்தில், பல தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி ஆசிரியப் பணியை இறைப்பணியாகவே மேற்கொண்டிருந்தார்.
1953இல் ஈச்ச மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி தொடர்ந்து தென்னை மரத் தோட்டத் தமிழ்ப்பள்ளி, இரசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கிள்ளான் மிட்லேண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, பந்திங் சுங்கை சோ தமிழ்ப்பள்ளி, காப்பார் நகரத் தமிழ்ப்பள்ளி என பணியாற்றி 1985இல் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், 1990 வரையில் கிள்ளான் அப்துல் சமாட் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கற்பித்துள்ளார்.
மற்றவர்களைப் போல அவரவர் பொறுப்பை அவரவர் செய்வர் என்று அமைதி கொள்பவரல்லர் இவர். எந்தச் செயலானும், அதில் தாமும் ஈடுபட்டு பிறருக்கும் செயலூக்கம் ஊட்டுவதில் வல்லவராக இருந்தார். செயல்படாதவர்களைத் துணிந்து அகற்றுவதிலும் இவர் தயக்கம் காட்டியதும் இல்லை.
மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம் முதலான அமைப்புகளை மலேசியாவில் தோற்றுவித்தவர் ஐயா வீரப்பனார்தான். இன்றும் இவ்விரு இயக்கங்களும் தமிழுக்கு ஆக்கமான பணிகளை அமைதியாகச் செய்து வருகின்றன.
சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் ஈடுபட்டு காலத்தால் எண்ணத்தக்க அரிய தொண்டாற்றிய ஐயா இர.ந.வீரப்பனார் 3.9.1999இல் இறைவனடி சேர்ந்தார்.
தமிழனின் மண் – இனம் – மொழி – பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியவர் மட்டுமன்று, அதற்குரிய ஆக்கமான பணிகளை நிலைபடச் செய்தவரும் கூட. இதற்குச் சில சான்றுகளையும் அடுக்கிக் கூறலாம்.
ஆரிய மேலாண்மையும் ஆணாதிக்கச் சிந்தனையும் சூழ்ந்திருந்த தமிழ் மக்களிடம் பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்தும் வண்ணம் தம் பெயருக்குரிய தலையெழுத்தாக முதலில் தாயின் பெயரையும் அடுத்ததாக தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டார்.
தாம் கைக்கொண்ட தமிழியச் சிந்தனைகளை தம்முடைய குழந்தைகளுக்கும் ஊட்டி வளர்த்தெடுத்தார். அவர்களுக்கு திருமேனி, பொன்னி, அருணன், முல்லை என்று அழகுதமிழ்ப் பெயர்ச்சூட்டி தமிழ் உணர்வூட்டி ஆளாக்கியிருக்கிறார். அன்னாரின் மகளார் வீ.முல்லை இன்று நாடறிந்த எழுத்தாளராகவும் தமிழியச் சிந்தனையாளராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயா அவர்களின் அரும்பணிகளை ஒவ்வொரு மலேசியத் தமிழரும் போற்றிக்கொள்ள வேண்டியன. அன்னாரின் செயற்பாடுகள் மிகவும் அளப்பரியன என்பதற்கு, இன்றையத் தலைமுறையைச் சேர்ந்த எம்போன்றோர் மனங்களில் அவர் இடம்பிடித்திருப்பதே தக்க சான்றாகும். அதுமட்டுமல்லாது, தமிழகப் பாவலர் ஐயா கதிர் முத்தையனார், இலண்டனைச் சேர்ந்த ஐயா சுரதா முருகையனார் முதலானோர் இர.ந.வீரப்பனாரைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.