ஆஸ்திரேலியாவின் இந்தியர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு தீர்வு காண முயற்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இறங்கி உள்ளார். இதன் முதல் படியாக, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக நல்லிணக்க இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் சனிக்கிழமை சிட்னி நகரில் நடத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து சிட்னியில் செய்தியாளர்களுக்கு ரகுமான் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது : ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களுக்கும் இனவெறி மட்டும் காரணமல்ல; பணத்திற்காகவும், நகைக்காகவும் ஆசைப்பட்டு நடத்தப்படும் திருட்டுக்களை அனைத்தையும் இனவெறி தாக்குதல்கள் என கூற முடியாது; சனிக்கிழமை சிட்னியில் நான் நடத்தும் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் அமையும். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் இரவில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்; ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் செல்லும் போது போதிய பாதுகாப்புடனேயே இந்தியர்கள் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்