சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலில் நெருங்கிவரும் போது எதிர்பாராத சம்பவங்கள் பல நடைபெறுமென எதிர்பார்க்கபடுகையில், திடீரென சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவர் உடனடிச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் சில தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை மாத்தளைப் பகுதியில் நடைபெற்ற பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள சென்ற போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் உடனடியாக, கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் அவருக்கு உடனடிச் சிகிச்சை அளித்த இருதய சிகிச்சை நிபுணர்கள் கோத்தபாயவை மேலதிக சிகச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கத் தெரிவித்த ஆலோசனைப்படி அன்று இரவே அவர் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளது பலத்த சந்தேகங்களளை எழுப்புவதாகவும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதை அவதானித்து, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல நடத்தப்பட்ட நாடகமாக இது இருக்கலாம் எனவும் அச்ட செய்திகளில் ஊகம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் கோத்தபாயாவின் மனைவி வெளிநாட்டுக் சென்றிருப்பதாகச் செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.