தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்த இறுதி கிரியை நடைபெற்ற போது, இரங்கல் உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் லங்காபேலியே கைது செய்யப்பட்டவராவார்.
அவர் உரையாற்றும் போது சம்பவ இடத்துக்கு வந்த வல்வெட்டித்துறை பிரதேச பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, அவர் சிங்களத்தில் மக்களுக்குள் உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி கைது செய்துள்ளார்.
அத்துடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி சாதனங்களும் தூக்கி எறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதியையும், அதன் உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் மரண வீட்டில் அஞ்சலி உரையாற்றக் கூட மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் உரிமை வழங்கப்படாத நிலை காணப்படுவதாக இடது சாரி முன்னணியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், பொலிசார் இதன் போது நடந்து கொண்ட முறைகள் அதிருப்தி அளிப்பதாகவும் கட்சியின் ஊடக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.