போப்பாண்டவரின் இலங்கையின் பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பீட்டரி அவர்கள் மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம் செய்திருக்கின்றார். மன்னார் நகருக்குச் சென்ற அவர், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் மறைமாவட்டத்தின் முக்கிய குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பின்னர், அவர் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து, பொதுமக்களையும், குருமார்களையும் சந்தித்துள்ளார்.
மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு வருகை தந்த அவர், வவுனியா பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வருகி;ன்ற போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள், முதியோர்கள், ஆகியோரைப் பார்வையிடவுள்ளார். அத்துடன் முக்கியமாக மனிக்பாமில் உள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார்.