விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் புதன்கிழமை இரவு காலமானதாக இலங்கை இராணுவத்தின் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 86 வயதான அவரது மரணம் இயற்கையாக ஏற்பட்டது என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
பிராபகரன் அவர்களின் பெற்றோர் பனாகொடையில் இருந்த ராணுவ கண்டோன்மெண்ட் பகுதியில் இராணுவத்தின் பாதுகாப்பில் இருந்ததாகவும் இலங்கை இராணுவம் கூறுகிறது.
மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மனைவியின் விருப்பத்தின் பேரில் அவரது இறுதிக் கிரியைகள் இடம் பெறும் என்றும், அவரது இரு மகள்களோ அல்லது மகனோ உடலைக் கோரினால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.