இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா வியாழனன்று பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் அறிக்கையை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.
முதலாவது நடவடிக்கையாக நாட்டில் அமைதியை ஏற்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்டுவேன் என்றும், இரண்டாவதாக ஊழலையும், மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் சரத் ஃபொன்சேகா தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவை தவிர ஒவ்வொரு குடும்பத்தினதும் நிதிநிலைமையை உறுதிப்படுத்துவேன் என்றும், வாழ்க்கைச் செலவினங்களை குறைப்பேன் என்றும் கூறியுள்ள அவர் பத்து அம்சங்கள் அடங்கிய தனது தேர்தல் உறுதி மொழிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளை ஆரம்பித்து, சுகாதார மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
வடகிழக்கு இணைப்பு மற்றும் அரசியல் தீர்வு குறித்து கருத்துக்கள் இல்லை
பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் இணைப்பு குறித்தோ அல்லது சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ எந்த விதமான கருத்துக்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.