காணாமல் போனவர்களின் பெற்றோர் சிலர்இலங்கையின் வடக்கே வவுனியாவில், இன்று கூடிய காணாமல் போனோரின் பெற்றோர் தமது பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
வவுனியா நகர மணிக்கூட்டுச் சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்மார்கள் பலரும் தமது பிள்ளைகளின் உருவப்படங்களைக் கைகளில் ஏந்தியவாறு வாய்விட்டு அழுதவண்ணம் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தார்கள். நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்து ஐநூறு பேர் வரையில் காணாமல் போயிருப்பது குறித்து தமக்கு முறையிடப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை இயக்குனராகிய சுந்தரம் மகேந்திரன் கூறுகின்றார்.
காணாமல் போனவர்களை சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் அல்லது தேடித்தர வேண்டும் எனக் கோரி பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்திவரும் தாங்கள் அடுத்த நடவடிக்கையாக காணாமல் போயுள்ள அனைவரினதும் புகைப்படங்களைத் திரட்டி, ஒரு கண்காட்சியை நடத்தி அதன் ஊடாக வலுவான ஓர் அழுத்தத்தைப் பிரயோகிக்கப் போவதாகவும் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்.