இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானது என எந்தவொரு வெளி நாட்டு ஊடகத்திற்கும் தான் கருத்து தெரிவிக்கவில்லை என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடியில் செவ்வாய் மாலை நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ள அவர், தனது கருத்து அந்த ஊடகத்தில் திரிபு படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந் நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் இந் நாடு சொந்தமானது என்பதை திட்டவட்டமாக கூறுகிறேன் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந் நாட்டில் வாழும் சகல இன மக்களும் சமாதானமாகவும், சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.
1990 ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, குருக்கள் மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை போன்ற சம்பவங்களையும் தனது உரையில் நினைவு படுத்திய ஜெனரல் சரத் பொன்சேகா, அது குறித்து தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்
இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க, ஐனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.