த.தே.கூ தேர்தல் குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையிலும், இரு பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களும் தங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தத் தேர்தல் தொடர்பில் தங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்காமலேயே உள்ளனர்.
" இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில், ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்களா என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது" என்று தான் கருதுவதாக இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தமிழோசையிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று அவர்களிடம் இருக்கும் குழப்ப நிலை மக்களிடையேயும் உள்ளது என்றும் கூறும் அவர், தமிழ் மக்களின் உணர்வலைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரதிபலிப்பதா அல்லது அவர்களுடைய முடிவை வடகிழக்கு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் கூறுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களோ அல்லது அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்திவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அந்த விவாதங்களின் தகவல்களை இதுவரை முழுமையாக வெளியிடாததும் தமிழ் மக்களிடையே எந்த வகையான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பில் ஒரு குழப்பமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரிய யுவி தங்கராஜா தெரிவிக்கிறார்.