இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகிய சரத் பொன்சேகா அவர்கள், நாட்டில் தற்போது உள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றார்.
சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத் பொன்சேகா அவர்கள் ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை உடையவர்களாக, இன, மத, குல வேறுபாடின்றி பாதுகாப்பாக வாழ்வதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதாக அவர் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
புதிய ஆட்சியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் 2000 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கவும், இராணுவம் பொலிசார் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் சமத்துவமான முறையில் ஊழலற்ற வகையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா அவர்கள் உறுதியளித்துள்ளார்