போர்க் காலத்தில் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கிவந்தவர் டாக்டர்.சிவபாலன்
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் போரின் இறுதி வாரங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர்களில் ஒருவரான சிவபாலன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வன்னியில் மருத்துவ சேவை வழங்கிவந்த மருத்துவர்கள் அங்கு இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை, அரசின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கொடுத்தது தொடர்பாக இவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த பிறகு கைதுசெய்யப்பட்டனர்.
பிறகு கொழும்பில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தாம் இந்த விபரங்களை அளித்ததாக இந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மருத்துவர்கள், அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஐந்தாவது டாக்டரான சிவபாலன், முன்பு அரச சேவையில் இருந்திருந்தாலும், பிறகு அவர் புலிகளுக்காக வேலை பார்த்தாக அரசு முன்பு குற்றம்சாட்டியிருந்தது.