இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னதாகவே அக்கூட்டமைப்பில் ஓர் அங்கமாக உள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி தனது இந்த முடிவை எடுத்துள்ளது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக் குழுக் கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
சுமார் எழுபத்தைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.
அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு தொடர்பில் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாபிள்ளை விநாயகமூர்த்தியின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.